Unnamed: 0
int64
0
1.34k
Book
stringclasses
75 values
Chapter
stringlengths
25
48
Content
stringlengths
252
17.1k
Url
stringlengths
47
62
500
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 23 – திருவிவிலியம்
ஆண்டவரே நம் ஆயர் (தாவீதின் புகழ்ப்பா) 1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். 5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. 6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். 23:2 திவெ 7:17; 24:1; 1 கொரி 10:26.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-23
501
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 24 – திருவிவிலியம்
மாவேந்தரின் வருகை (தாவீதின் புகழ்ப்பா) 1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. 3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? 4 கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர், 5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: *யாக்கோபின் கடவுளது முகத்தைத்* தேடுவோர் இவர்களே. (சேலா) 7 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். 8 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். 9 வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். 10 மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர். (சேலா) 24:4 மத் 5:8. 24:6 *…* ‘யாக்கோபே! உனது முகத்தை’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-24
502
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 25 – திருவிவிலியம்
வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல் (தாவீதின் புகழ்ப்பா) 1 ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன். 2 என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும். 3 உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர். 4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; 6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். 8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். 10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். 11 ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது. 12 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்பிப்பார். 13 அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர். 14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; 15 என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன; அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். 16 என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன். 17 என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும். 18 என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும். 19 என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்! 20 என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும். 21 வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன். 22 கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-25
503
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 26 – திருவிவிலியம்
நேர்மையாளரின் விண்ணப்பம் (தாவீதுக்கு உரியது) 1 ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்; ஏனெனில், என் நடத்தை நேர்மையானது; நான் ஆண்டவரை நம்பினேன்; நான் தடுமாறவில்லை. 2 ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்; என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்; 3 ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது; உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன். 4 பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை; வஞ்சகரோடு நான் சேர்வதில்லை. 5 தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்; பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை. 6 மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்; ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன். 7 உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்; வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்; 8 ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்பிகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்; 9 பாவிகளுக்குச் செய்வதுபோல் என் உயிரைப் பறித்து விடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்! 10 அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக்கையில் நிறையக் கையூட்டு. 11 நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும். 12 என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-26
504
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 27 – திருவிவிலியம்
புகழ்ச்சிப் பாடல் (தாவீதுக்கு உரியது) 1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? 2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். 3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். 4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். 5 ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னைப் பாதுகாப்பாய் வைப்பார். 6 அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள. என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்; அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன். 7 ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என் மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். 8 ‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்; ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். 9 உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும்; என்னைக் கைவிடாதிரும். 10 என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார். 11 ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்; என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும். 12 என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர். 13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-27
505
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 28 – திருவிவிலியம்
உதவிக்காக மன்றாடல் (தாவீதுக்கு உரியது) 1 ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்; நீர் மௌனமாய் இருப்பீராகில், படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன். 2 நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கையுயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும். 3 பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்! தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்! அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்; அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம். 4 அவர்களின் செய்கைக்கேற்ப, அவர்களின் தீச்செயலுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை அளியும்; அவர்கள் கைகள் செய்த தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை வழங்கியருளும், அவர்களுக்குத் தகுந்த கைம்மாறு அளித்தருளும். 5 ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ அவர்கள் மதிக்கவில்லை; ஆகையால் அவர் அவர்களைத் தகர்த்தெறிவார்; ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், அவர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார். 7 ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசைபாடி அவருக்கு நன்றி கூறுவேன். 8 ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண். 9 ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக்கொள்ளும். 28:4 திவெ 22:12.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-28
506
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 29 – திருவிவிலியம்
புயல் நடுவே ஆண்டவரின் குரல் (தாவீதின் புகழ்ப்பா) 1 இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆம்! ஆண்டவருக்கே உரித்தாக்குங்கள்! 2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். 3 ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். 4 ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. 5 ஆண்டவரின் குரல் கேதுருமரங்களை முறிக்கின்றது; ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார். 6 லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்; சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார். 7 ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது; 8 ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது; ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார். 9 ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது*; காடுகளை வெறுமை ஆக்குகின்றது; அவரது கோவிலில் உள்ளஅனைவரும் ‛இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். 10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். 11 ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம் மக்களுக்குச் சமாதானம் அருள்வாராக! ஆண்டவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! 29:1-2 திபா 96:7-9. 29:9 *‘மானைக் கன்று ஈனச் செய்கிறது’ எனவும் பொருள்படும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-29
507
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 30 – திருவிவிலியம்
நன்றி செலுத்தல் (புகழ்ப்பா; திருக்கோவில் அர்ப்பணப்பா; தாவீதுக்கு உரியது) 1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 2 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர். 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். 4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. 6 நான் வளமுடன் வாழந்தபோது, ‛என்னை ஒருபோதும் அசைக்க முடியாது’ என்றேன். 7 ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்; உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்; நான் நிலைகலங்கிப் போனேன். 8 ஆண்டவரே, உம்மைநோக்கி மன்றாடினேன்; என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன். 9 நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா? 10 ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11 நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர். 12 ஆகவே என் உள்ளம்* உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். 30:12 ‘மாட்சி’ எனவும் பொருள்படும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-30
508
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 31 – திருவிவிலியம்
இறைவனின் நம்பிக்கை (பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா) 1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; 2 உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும்; எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமை மிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். 4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர். 6 நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன். 7 உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்; என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர். 8 என் எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை; அகன்ற இடத்தில் காலூன்றி நிற்கவைத்தீர். 9 ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்; துயரத்தால் என் கண்ணும் என் உயிரும் என் உடலும் தளர்ந்து போயின. 10 என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது; ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது; துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது; என் எலும்புகள் தளர்ந்து போகின்றன. 11 என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்; என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர். 12 இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். 13 பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது; எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்; என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். 14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். 16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். 17 ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்; என்னை வெட்கமுற விடாதேயும்; பொல்லார் வெட்கிப்போவார்களாக! பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக! 18 பொய்சொல்லும் வாய் அடைபட்டுப் போவதாக! செருக்கும் பழிப்புரையும் கொண்டு, நேர்மையாளருக்கு எதிராக இறுமாப்புடன் பேசும் நா கட்டுண்டு கிடப்பதாக! 19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! 20 மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! 21 ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார். 22 நானோ, கலக்கமுற்ற நிலையில் ‛உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்’ என்று சொல்லிக் கொண்டேன்; ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீர். 23 ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்; ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்; ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார். 24 ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். 31:5 லூக் 23:46.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-31
509
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 32 – திருவிவிலியம்
பாவ அறிக்கையும் மன்னிப்பும் (தாவீதின் அறப்பாடல்) 1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். 3 என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின. 4 ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று. (சேலா) 5 ‛என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். (சேலா) 6 ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. 7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். (சேலா) 8 நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். 9 கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே! 10 பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும். 11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். 32:1-2 உரோ 4:7-8.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-32
510
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 33 – திருவிவிலியம்
புகழ்ச்சிப் பாடல் 1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். 4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. 6 ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின. 7 அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்து வைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார். 8 அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக! 9 அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது. 10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். 11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். 14 தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15 அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! 16 தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை. 17 வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. 18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். 20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-33
511
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 34 – திருவிவிலியம்
கடவுளின் கருணையைப் புகழ்தல் (தாவீதுக்கு உரியது; அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது) 1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். 3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். 5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். 7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். 9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. 11 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். 12 வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? 13 அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! 14 தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. 15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. 16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. 21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். 22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். 34 தலைப்பு: 1 சாமு 21:13-15;. 34:8 1 பேது 2:3. 34:12 1 பேது 3:10-12. 34:20 யோவா 19:36.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-34
512
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 35 – திருவிவிலியம்
உதவிக்காக மன்றாடல் (தாவீதுக்கு உரியது) 1 ஆண்டவரே, எனக்கெதிராய் வழக்காடுவோருடன் வழக்காடும்; என்மீது போர் தொடுப்போரோடு போர் புரியும். 2 கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்; எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும். 3 என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்; ஈட்டியையும் வேலையும் கையிலெடும்; ‛நானே உன் மீட்பர்’ என்று என் உள்ளத்திற்குச் சொல்லும். 4 என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்; மானக்கேடுற்று இழிவடையட்டும்; எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும். 5 ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டியடிக்க, காற்றில் பறக்கும் பதர்போல அவர்கள் சிதறட்டும். 6 ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும். 7 ஏனெனில், காரணமின்றி எனக்குக் கண்ணி வைத்தனர்; காரணமின்றி எனக்குக் குழிதோண்டினர். 8 அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்; அவர்களுக்கு வைத்த கண்ணியில் அவர்களே சிக்கக்கொள்ளட்டும்; அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே விழட்டும். 9 என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்; அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும். 10 ‟ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே” என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும். 11 பொய்ச்சான்று சொல்வோர் எனக்கெதிராய் எழுகின்றனர்; எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி என்னிடம் வினவுகின்றனர். 12 நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்; அவர்களோ, அதற்குப் பதிலாக எனக்குத் தீங்கிழைத்தனர். என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர். 13 நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது, சாக்கு உடுத்திக் கொண்டேன்; நோன்பிருந்து என்னை வருத்திக் கொண்டேன்; முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன். 14 நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும் அவர்களுக்காய் மன்றாடினேன்; தாய்க்காகத் துக்கம் கொண்டாடுவோரைப்போல வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன். 15 நான் தடுக்கி விழுந்தபோது அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்; எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்; யாதொன்றும் அறியாத என்னைச் சின்னாபின்னமாக்கி ஓயாது பழித்துரைத்தனர். 16 இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து அவர்கள் என்னை இகழ்ந்தனர்; எள்ளி நகையாடினர்; என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தனர். 17 என் தலைவரே, இன்னும் எத்தனை நாள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?; என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும் என் ஆருயிரைச் சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும். 18 மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன். 19 வஞ்சகரான என் எதிரிகள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்; காரணமின்றி என்னை வெறுப்போர் கண்சாடை காட்டி இகழவிடாதீர். 20 ஏனெனில், அவர்களது பேச்சு சமாதானத்தைப் பற்றியதன்று; நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக அவர்கள் வஞ்சகமாய்ச் சூழ்ச்சி செய்கின்றனர். 21 எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து, ‛ஆ! ஆ! நாங்களே எங்கள் கண்ணால் கண்டோம்’ என்கின்றனர். 22 ஆண்டவரே, நீர் இதைக் கண்டும் மௌனமாய் இராதீர்; என் தலைவரே, என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதீர். 23 என் கடவுளே, கிளர்ந்தெழும்! என் தலைவரே, விழித்தெழுந்து என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும். 24 என் கடவுளாகிய ஆண்டவரே, உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்! அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதேயும்! 25 அவர்கள் தங்கள் உள்ளத்தில் ‛ஆம், நாம் விரும்பினது இதுவே’ எனச் சொல்லாதபடி பாரும்! ‛அவனை விழுங்கிவிட்டோம்’ எனப் பேசிக்கொள்ளாதபடி பாரும்! 26 எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்! என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்! 27 என் நேர்மை நிலைநாட்டப்படுவதை விரும்புவார் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்; ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்! அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக் காண விரும்புவோர்’ என்று எப்பொழுதும் சொல்லட்டும். 28 அப்பொழுது, என் நா உம் நீதியை எடுத்துரைத்து, நாள் முழுதும் உம் புகழ் பாடும். 35:19 திபா 69:4; யோவா 16:25.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-35
513
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 36 – திருவிவிலியம்
மானிடரின் தீய குணம் (பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் ஊழியரான தாவீதுக்கு உரியது) 1 *பொல்லாரின் உள்ளத்தில்* தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது; அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை. 2 ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர். 3 அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை; நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர். 4 படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர், தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்; தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை. கடவுளின் கருணை 5 ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை. 6 ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை; மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே; 7 கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். 8 உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். 9 ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம். 10 உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! 11 செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்! பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும்! 12 தீங்கிழைப்போர் அதோ அங்கே குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர், அவர்கள் நசுக்கப்பட்டனர்; அவர்களால் எழவே இயலாது. 36:1 உரோ 3:18. 36:1 *…* ‘என் உள்ளத்தில்’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-36
514
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 37 – திருவிவிலியம்
பொல்லார், நல்லார் முடிவுகள் (தாவீதுக்கு உரியது) 1 தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே; 2 ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்; பசும் பூண்டைப்போல் வாடிப்போவர். 3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். 5 உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார். 6 உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். 7 ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே. 8 வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும். 9 தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர். 10 இன்னும் சிறிதுகாலம்தான்; பிறகு பொல்லார் இரார்; அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார். 11 எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்; அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர். 12 பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்; அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர். 13 என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்; அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார். 14 எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்; வில்லை நாணேற்றுகின்றனர். 15 ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்; அவர்கள் வில்லும் முறிக்கப்படும். 16 பொல்லாரின் திரளான செல்வத்தைவிட நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது. 17 பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்; ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார். 18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். 19 கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள். 20 ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்; ஆண்டவரின் எதிரிகள் கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர். அவர்கள் எரியுண்டு புகையென மறைவர். 21 பொல்லார் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்; நேர்மையாளரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர். 22 இறைவனின் ஆசி பெற்றோர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர். 23 தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். 24 அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார். 25 இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ! முதியவன் ஆகிவிட்டேன்; ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை; அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை. 26 நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்; அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர். 27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். 29 நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர். 30 நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும். 31 கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. 32 பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்; அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர். 33 ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்; நீதி விசாரணையின்போது அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார். 34 ஆண்டவருக்காகக் காத்திரு; அவர்தம் வழியைப் பின்பற்று; அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக்கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார். பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய். 35 வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன். 36 ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்; அந்தோ! அவர்கள் அங்கில்லை; தேடிப் பார்த்தேன்; அவர்களைக் காணவில்லை. 37 சான்றோரைப் பார்; நேர்மையானவரைக் கவனி; அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர். 38 அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்; பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர். 39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார். 37:11 மத் 5:5.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-37
515
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 38 – திருவிவிலியம்
துன்புற்றவரின் மன்றாட்டு (தாவீதின் புகழ்ப்பா; நினைவு கூர்தலுக்காகப் பாடியது) 1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்; 2 ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன; உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது. 3 நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை; என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை. 4 என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன. 5 என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன; என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம். 6 நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்; நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன். 7 என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று; என் உடலில் சற்றேனும் நலம் இல்லை. 8 நான் வலுவற்றுப் போனேன்; முற்றிலும் நொறுங்கிப்போனேன்; என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன். 9 என் தலைவரே, என் பெருமூச்செல்லாம் உமக்குத் தெரியும்; என் வேதனைக் குரல் உமக்கு மறைவாயில்லை. 10 என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது; என் வலிமை என்னைவிட்டு அகன்றது; என் கண்களும்கூட ஒளி இழந்தன. 11 என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்; என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர். 12 என் உயிரைப் பறிக்கத்தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர் என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர். 13 நானோ செவிடர்போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கின்றேன். 14 உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர் போலும் மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன்; 15 ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்; என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும். 16 ‛அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க விடாதேயும்; என் கால் தடுமாறினால் அவர்கள் பெருமை கொள்வர்’ என்று சொன்னேன். 17 நான் தடுமாறிவிழும் நிலையில் இருக்கின்றேன்; நான் எப்போதும் வேதனையில் உள்ளேன். 18 என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்; என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன். 19 காரணமின்றி என்னைப் பகைப்போர் வலுவாய் உள்ளனர்; வீணாக என்னை வெறுப்போர் பலராய் உள்ளனர்; 20 நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்; நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர்; 21 ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்; என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும். 22 என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-38
516
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 39 – திருவிவிலியம்
மானிட வாழ்க்கையின் நிலையாமை (பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; தாவீதின் புகழ்ப்பா) 1 ‛நான் என் நாவினால் பாவம் செய்யாதவண்ணம் என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன்; பொல்லார் என்முன் நிற்கும் வரையில், என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் காத்துக் கொள்வேன்’ என்று சொன்னேன். 2 நான் ஊமையைப்போல் பேசாது இருந்தேன்; நலமானதைக்கூடப் பேசாமல் அமைதியாய் இருந்தேன்; என் வேதனையோ பெருகிற்று. 3 என் உள்ளம் என்னுள் எரியத் தொடங்கிற்று; நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது நெருப்பு மூண்டது; அப்பொழுது என் நா பேசியதாவது; 4 ‛ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன். 5 என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா) 6 அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்; அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார். 7 என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கிறேன். 8 என் குற்றங்கள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்; மதிகேடரின் பழிப்புரைக்கு என்னை ஆளாக்காதேயும். 9 நான் ஊமைபோல் ஆனேன்; வாய் திறவேன்; ஏனெனில், எனக்கு இந்நிலைமையை வருவித்தவர் நீரே. 10 நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்; உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன். 11 குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது, பூச்சி அரிப்பதுபோல், அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்; உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா) 12 ஆண்டவரே! என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; ஏனெனில், உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்; என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி! 13 நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி, உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-39
517
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 40 – திருவிவிலியம்
புகழ்ச்சிப் பாடல் (பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா) 1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். 2 அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். 3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்; 4 ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறு பெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர். 5 ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்; உமக்கு நிகரானவர் எவரும் இலர்; என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே; அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணிலடங்கா. 6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7 எனவே, ‛இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது’ என்றேன் நான். 9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். 10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. 11 ஆண்டவரே; உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக! உதவிக்காக மன்றாடல் (திபா 70) 12 ஏனெனில், எண்ணிறிந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன; என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது. 13 ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்; ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும். 14 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் அவமானமும் குழப்பமும் அடையட்டும்! என் கேட்டில் மகிழ்வுறுவோர் தலைகுனிந்து பின்னடையட்டும்! 15 என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!’ என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்! 16 உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’ என்று எப்போதும் சொல்லட்டும்! 17 நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 40:6-8 எபி 10:5-7.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-40
518
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 41 – திருவிவிலியம்
நோயுற்றவரின் மன்றாட்டு (பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா) 1 எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்; துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார். 2 ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்; நெடுங்காலம் வாழவைப்பார்; நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்; எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார். 3 படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்; நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார். 4 ‛ஆண்டவரே, எனக்கு இரங்கும்; என்னைக் குணப்படுத்தும்; உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’ என்று மன்றாடினேன். 5 என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி, ‛அவன் எப்போது சாவான்? அவன் பெயர் எப்போது ஒழியும்’ என்கின்றனர். 6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால், நயவஞ்சகமாகப் பேசுகின்றான்; என்னைப்பற்றிய தவறான செய்திகளைச் சேகரித்துக்கொண்டு, வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான். 7 என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர். 8 ‛தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது; படுக்கையில் கிடக்கின்ற அவன் இனி எழவே மாட்டான்’ என்று சொல்கின்றனர். 9 என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான். 10 ஆண்டவரே! என் மீது இரங்கி, நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும். 11 என் எதிரி என்னை வென்று ஆர்ப்பரிக்கப் போவதில்லை; இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர் என்பதை அறிந்து கொள்கின்றேன். 12 நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்; நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்; உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர். 13 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவராக! ஆமென்! ஆமென்! 41:9 மத் 26:23; மாற் 14:18; லூக் 22:21; யோவா 13:18. 41:13 திபா 106:48.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-41
519
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 42 – திருவிவிலியம்
இரண்டாம் பகுதி (42-72) நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு (பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்) 1 கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. 2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? 3 இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று; ‛உன் கடவுள் எங்கே?’ என்று என்னிடம் *தீயோர் கேட்கின்றனர்.* 4 மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது. 5 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன். 6 என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது; ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும் உம்மை நான் நினைத்துக் கொண்டேன். 7 உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது; உம் சிற்றலைகளும் பேரலைகளும் என்மீது புரண்டோடுகின்றன. 8 நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்; எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன். 9 என் கற்பாறையாகிய இறைவனிடம் ‛ஏன் என்னை மறந்தீர்; எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன். 10 ‛உன் கடவுள் எங்கே?’ என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது. 11 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன். 42:3 *…* ‘அவன் கேட்கிறான்’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-42
520
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 43 – திருவிவிலியம்
நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு (திபா 42 இன் தொடர்ச்சி) 1 கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும். 2 ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்? 3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். 4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். 5 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன். 43 திபா 42இன் தொடர்ச்சி.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-43
521
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 44 – திருவிவிலியம்
பாதுகாப்புக்காக வேண்டல் (பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்) 1 கடவுளே, எங்கள் காதுகளால் நாங்களே கேட்டிருக்கின்றோம்; எங்கள் மூதாதையர் அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும் நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று எங்களுக்கு எடுத்துரைத்தனர். 2 உமது கையால் வேற்றினத்தாரை விரட்டியடித்து, எந்தையரை நிலைநாட்டினீர்; மக்களினங்களை நொறுக்கிவிட்டு எந்தையரைச் செழிக்கச் செய்தீர். 3 அவர்கள் தங்கள் வாளால் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளவில்லை; அவர்கள் தங்கள் புயத்தால் வெற்றி பெறவில்லை. நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால் உமது வலக்கையும் உமது புயமும் உமது முகத்தின் ஒளியுமே அவர்களுக்கு வெற்றியளித்தன. 4 நீரே என் அரசர்; நீரே என் கடவுள்! யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே. 5 எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்; எங்களுக்கு எதிராய் எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம். 6 என் வில்லை நான் நம்புவதில்லை; என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை. 7 நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்; எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர். 8 எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம். என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்திவந்தோம். (சேலா) 9 ஆயினும், இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்; இழிவுபடுத்திவிட்டீர் எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர். 10 எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர். 11 உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல் எங்களை ஆக்கிவிட்டீர். வேற்றினத்தாரிடையே எங்களைச் சிதறியோட செய்தீர். 12 நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்; அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர். 13 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்; எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர். 14 வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்; ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர். 15 எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும் என் கண்முன் நிற்கின்றது; அவமானம் என் முகத்தை மூடியுள்ளது. 16 என்னைப் பழித்துத் தூற்றுவோரின் குரலை நான் கேட்கும்போதும், என் எதிரிகளையும், என்னைப் பழிவாங்கத் தேடுவோரையும் நான் பார்க்கும்போதும் வெட்கிப்போகின்றேன். 17 நாங்கள் உம்மை மறக்காவிடினும், உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன. 18 எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை; எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 19 ஆயினும், நீர் எங்களை கொடிய பாம்புகள் உள்ள இடத்தில் நொறுங்கும்படி விட்டுவிட்டீர்; சாவின் இருள் எங்களைக் கவ்விக்கொண்டது. 20 நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை மறந்துவிட்டு, வேற்றுத் தெய்வத்தைக் கைகூப்பி வணங்கியிருந்தோமானால், 21 கடவுளாம் நீர் அதைக் கண்டுபிடித்திருப்பீர் அல்லவா? ஏனெனில், உள்ளத்தில் புதைந்திருப்பவற்றை நீர் அறிகின்றீர். 22 உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகின்றோம்; வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளெனக் கருதப்படுகின்றோம். 23 என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும். 24 நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக் கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்து விடுகின்றீர்? 25 நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்; எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது. 26 எழுந்து வாரும்; எங்களுக்குத் துணை புரியும்; உமது பேரன்பை முன்னிட்டு எங்களை மீட்டருளும். 44:22 உரோ 8:36.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-44
522
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 45 – திருவிவிலியம்
அரசரின் திருமணப்பாடல் (பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்கள்’ என்ற மெட்டு; கோராகியரின் அறப்பாடல்; காதல் பாடல்) 1 மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்ற போழ்து, இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது; திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே! 2 மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்; உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்துவரும்; கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகின்றார். 3 வீரமிகு மன்னா! மாட்சியொடு உம் மாண்பும் துலங்கிடவே, உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்! 4 உண்மையைக் காத்திட, நீதியை நிலைநாட்டிட, மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்! உம் வலக்கை அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக! 5 உம்முடைய கணைகள் கூரியன; மன்னர்தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர். 6 இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல். 7 நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு; எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உமக்குத் திருப்பொழிவு செய்து, உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார். 8 நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணங்கமழும் உம் ஆடையெலாம்; தந்தம் இழைத்த மாளிகைதனிலே யாழிசை உம்மை மகிழ்விக்கும். 9 அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! 10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. 11 உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! 12 தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்; செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர். 13 அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். 14 பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். 15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். 16 உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெலாம் இளவரசர் ஆக்கிடுவீர். 17 என் பாடல் வழிவழியாய் உம் பெயரை நிலைக்கச் செய்யும்; ஆகையால், எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர். 45:6-7 எபி 1:8-9.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-45
523
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 46 – திருவிவிலியம்
நம்மோடு வாழும் கடவுள் (பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் பாடல்; ‘இளமகளிர்’ என்ற மெட்டு) 1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், 3 கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா) 4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. 6 வேற்றினத்தார் கலக்கமுற்றனர்; அரசுகள் ஆட்டம் கண்டன; கடவுளின் குரல் முழங்கிற்று; பூவுலகம் கரைந்தது. 7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா) 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! 9 உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்; வில்லை ஒடிக்கின்றார்; ஈட்டியை முறிக்கின்றார். தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார். 10 அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்; வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்; பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன். 11 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-46
524
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 47 – திருவிவிலியம்
ஆண்டவரே உலகின் அரசர் (பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா) 1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே; 3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா) 5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். 7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். 9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-47
525
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 48 – திருவிவிலியம்
கடவுளின் திரு நகர் (கோராகியரின் புகழ்ப்பாடல்) 1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். 2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். 4 இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்; 5 அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். 6 அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர். 7 தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். 8 கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்; படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்; கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (சேலா) 9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். 10 கடவுளே! உமது பெயரைப் போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. 11 சீயோன் மலை மகிழ்வதாக! யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக! 12 சீயோனை வலம் வாருங்கள்; அதைச்சுற்றி நடைபோடுங்கள்; அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள். 13 அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்; அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்; அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு இதை உங்களால் விவரிக்க இயலும். 14 இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்; அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார். 48:2 மத் 5:35.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-48
526
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 49 – திருவிவிலியம்
செல்வம் பயன் அற்றது (பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா) 1 மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள். 2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள். 3 என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்; என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும். 4 நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில் நான் கருத்தாய் உள்ளேன்; யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன். 5 துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? 6 தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். 7 உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது. 8 மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது. 9 ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? 10 ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர். 11 கல்லறைகளே* அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு! அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை. 12 ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார். 13 தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே; தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே. (சேலா) 14 பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்; சாவே அவர்களின் மேய்ப்பன்; *அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்;* அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்; பாதாளமே அவர்களது குடியிருப்பு. 15 ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார். (சேலா) 16 சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! 17 ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. 18 உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், ‛நீங்கள் நன்மையையே நாடினீர்கள்’ என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், 19 அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. 20 மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர். 49:11 * ‘உள்ளுறுப்புகளே’ என்பது எபிரேய பாடம். 49:14 *…* ‘நீதிமான்கள் வைகறையில் அவர்கள்மேல் வெற்றி கொள்வர்’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-49
527
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 50 – திருவிவிலியம்
உண்மை வழிபாடு (ஆசாபின் புகழ்ப்பா) 1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். 2 எழிலின் நிறைவாம் சீயோனின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். 3 நம் கடவுள் வருகின்றார்; மௌனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னே, சுட்டெரிக்கும் தழல் நெருப்பு! அவரைச் சுற்றிலும், கடுமையான புயற்காற்று! 4 உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார். 5 ‛பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்று கூட்டுங்கள்.’ 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! (சேலா) 7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்; 8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. 10 ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை. 11 குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. 12 எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை; ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே. 13 எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக்கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ? 14 கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள். 16 ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்; ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். 18 திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு. 19 உங்கள் வாய் உரைப்பது தீமையே; உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே. 20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப்பற்றி அவதூறு பேசுகின்றீர்கள். 21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். 22 கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார். 23 நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-50
528
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 51 – திருவிவிலியம்
பாவ மன்னிப்புக்காக மன்றாடல் (பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா. தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது) 1 கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; 3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். 5 இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். 6 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். 7 ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். 8 மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக! 9 என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். 10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். 12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். 16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. 18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! 19 அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும். 51 தலைப்பு: 2 சாமு 12:1-8. 51:4 உரோ 3:4.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-51
529
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 52 – திருவிவிலியம்
இறைவனின் தீர்ப்பும் திருவருளும் (பாடகர் தலைவர்க்கு: அகிமெலக்கின் வீட்டுக்குத் தாவீது போனாரென்று ஏதோமியன் தோயேகு சவுலுக்கு அறிவித்த போது தாவீது பாடிய அறப்பாடல்) 1 வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்? இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது. 2 கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்; உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ! 3 நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்; உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (சேலா) 4 நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே! 5 ஆகவே! கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்; உன்னைத் தூக்கி எறிவார்; கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்; உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார். (சேலா) 6 நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்; மேலும், உன்னை எள்ளி நகையாடிக் கூறுவர்; 7 ‛இதோ! பாருங்கள்; இவன் தான் கடவுளைத் தன் புகலிடமாய்க் கொள்ளாதவன்; தன் செல்வப் பெருக்கில் நம்பிக்கை வைத்தவன்; அழிவுச் செயலையே புகலிடமாய்க் கொண்டவன்!’ 8 நானோ, கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவமரக்கன்றுபோல் இருக்கின்றேன்; கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன். 9 கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்; உம் அன்பரின் முன்னிலையில், உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்; இதுவே நன்று. 52 தலைப்பு: 1 சாமு 22:2-9.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-52
530
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 53 – திருவிவிலியம்
இறைப்பற்று இல்லார் (பாடகர் தலைவர்க்கு: ‘நோயுற்று’ என்ற மெட்டு; தாவீதின் அறப்பாடல்) (திபா 14) 1 ‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்; நல்லது செய்வார் யாரும் இல்லை. 2 கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார். 3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டு போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர் கூட இல்லை. 4 ‛தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கின்றார்களே!’ இவர்கள் கடவுளை நோக்கி மன்றாடுவதுமில்லை; 5 எனவே, அவர்கள் இதுவரை கண்டிராத முறையில் பேரச்சத்தால் நடுநடுங்குவர்; இறைமக்களை ஒடுக்கியோரின் எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்; கடவுள் அவர்களைக் கைவிட்டதால் அவர்கள் மானக்கேடு அடைவர். 6 சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! கடவுள் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக! 53:1-3 உரோ 3:10-12.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-53
531
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 54 – திருவிவிலியம்
எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல் (பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது, தாவீது பாடிய அறப்பாடல்) 1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். 2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். 3 ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா) 4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; 5 என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே அவர் திருப்பிவிடுவாராக! ‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப அவர்களை அழித்தொழியும்! 6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’ 7 ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்; என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டுள்ளேன். 54 தலைப்பு: 1 சாமு 23:19; 26:1.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-54
532
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 55 – திருவிவிலியம்
காட்டிக் கொடுக்கப்பட்டவரின் மன்றாட்டு (பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் அறப்பாடல்) 1 கடவுளே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்; நான் முறையிடும் வேளையில் உம்மை மறைத்துக் கொள்ளாதேயும். 2 என் விண்ணப்பத்தைக் கேட்டு மறுமொழி அருளும்; என் கவலைகள் என் மன அமைதியைக் குலைத்துவிட்டன. 3 என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்; ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய்கின்றனர்; சினமுற்று என்னைப் பகைக்கின்றனர். 4 கடுந்துயரம் என் உள்ளத்தைப் பிளக்கின்றது; சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது. 5 அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன; திகில் என்னைக் கவ்விக்கொண்டது. 6 நான் சொல்கின்றேன்; ‛புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே! 7 இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா) 8 பெருங்காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே! 9 என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும்; ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்’. 10 இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர்; கேடும் கொடுமையும் அதில் நிறைந்திருக்கின்றன. 11 அதன் நடுவே இருப்பது அழிவு; அதன் தெருக்களில் பிரியாதிருப்பன கொடுமையும் வஞ்சகமுமே! 12 என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல; அப்படியிருந்தால், பொறுத்துக்கொள்வேன்; எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல; அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக்கொள்வேன். 13 ஆனால், அவன் வேறு யாரும் அல்ல; என் தோழனாகிய நீயே; என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான். 14 நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்; கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்; 15 என் எதிரிகளுக்குத் திடீரெனச் சாவு வரட்டும்; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கட்டும்; ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில் அவர்கள் நடுவிலேயே தீமை புகுந்து விட்டது. 16 நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்; ஆண்டவரும் என்னை மீட்டருள்வார். 17 காலை, நண்பகல், மாலை வேளைகளில் நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்; அவர் என் குரலைக் கேட்டருள்வார். 18 அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்; என்னோடு போரிட்டோர் கையினின்று அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார். 19 தொன்றுதொட்டு அரியணையில் வீற்றிருக்கும் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்; அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா) ஏனெனில், அவர்கள் தம் நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை; கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை. 20 தன்னோடு நட்புறவில் இருந்தவர்களை எதிர்த்து அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்; தன் உடன்படிக்கையையும் மீறினான். 21 அவன் பேச்சு வெண்ணெயிலும் மிருதுவானது; அவன் உள்ளத்திலோ போர்வெறி; அவன் சொற்கள் எண்ணெயிலும் மென்மையானவை; அவையோ உருவிய வாள்கள். 22 ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். 23 கடவுளே, நீர் அவர்களைப் படுகுழியில் விழச்செய்யும்; கொலைவெறியரும் வஞ்சகரும் தம் ஆயுள் காலத்தில் பாதிகூடத் தாண்டமாட்டார்; ஆனால், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-55
533
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 56 – திருவிவிலியம்
பற்றுறுதியும் நம்பிக்கையும் (பாடகர் தலைவர்க்கு: ‘தொலையில் வாழும் மௌன மாடப்புறா’ என்ற மெட்டு; பெலிஸ்தியர் தாவீதைக் காத்து என்னுமிடத்தில் பிடித்த வேளை அவர் பாடிய கழுவாய்ப்பாடல்) 1 கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்; அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர். 2 என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்; மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுவோர். 3 அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன். 4 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும்? 5 என் எதிரிகள் எந்நேரமும் என் சொற்களைப் புரட்டுகின்றனர்; அவர்கள் திட்டங்கள் எல்லாம் என்னைத் துன்புறுத்தவே. 6 அவர்கள் ஒன்றுகூடிப் பதுங்கி இருக்கின்றனர்; என் உயிரைப் போக்குவதற்காக என் காலடிச் சுவடுகளைக் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். 7 அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத் தப்பமுடியுமோ? கடவுளே, சினம் கொண்டெழுந்து இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும். 8 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா? 9 நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். 10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவனின் வாக்கை நான் புகழ்கின்றேன். 11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? 12 கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன். 13 ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! 56 தலைப்பு: 1 சாமு 22:1; 24:3.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-56
534
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 57 – திருவிவிலியம்
உதவிக்காக வேண்டல் (பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; சவுலுக்குத் தப்பியோடிக் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்) 1 கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். 2 உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். 3 வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார். (சேலா) கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். 4 மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்; அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை; அவர்களின் நா கூர்மையான வாள் போன்றது. 5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! 6 நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; நான் மனம் ஒடிந்து போனேன்; என் பாதையில் குழி வெட்டினர்; அவர்களே அதில் விழுந்தனர். (சேலா) 7 என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 8 என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். 9 என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! 11 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-57
535
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 58 – திருவிவிலியம்
பொல்லாரின் தண்டிப்புக்காக வேண்டல் (பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் கழுவாய்ப்பாடல்) 1 ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்பு உண்மையில் நீதியானதா? மாந்தர்க்கு நேர்மையுடன் தீர்ப்பு வழங்குகின்றீரா? 2 இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கே நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்; நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு உடந்தையாய் இருக்கின்றீர்கள். 3 பொல்லார் கருவிலிருந்தே நெறிதவறிச் செல்கின்றனர்; பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர். 4 அவர்களது நச்சுத்தன்மை நாகத்தின் நஞ்சு போன்றது; செவிட்டு விரியன் தன் காதை அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச் செவிடாக்கிக் கொள்கின்றனர். 5 பாம்பாட்டியின் மகுடியோசை அவ்விரியனின் காதில் விழாது; அவன் திறமையுடன் ஊதினாலும் அதற்குக் கேளாது. 6 கடவுளே, அவர்கள் வாயின் பற்களை நொறுக்கிவிடும்; ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும். 7 காட்டாற்று நீர்போல அவர்கள் மறைந்தொழியட்டும்; அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன் அம்புகள் முறிந்து போகட்டும்! 8 ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும் நத்தைபோல் ஆகட்டும்; பிறந்தும் கதிரொளி காணாத பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும். 9 முள் நெருப்பினால் உங்கள் பானை சூடேறுமுன்னே, பச்சையானதையும் வெந்துகொண்டிருப்பதையும் சுழற்காற்றினால் அவர் அடித்துக்கொண்டு போவார். 10 தீயோர் தண்டிக்கப்படுவதை நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்; அவர்கள் தம் பாதங்களைப் பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர். 11 அப்போது மானிடர், ‘உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு; மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கின்றார்’ என்று சொல்வர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-58
536
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 59 – திருவிவிலியம்
பாதுகாப்புக்காக மன்றாடல் (பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் வீட்டருகே காத்திருந்து அவரைக் கொல்வதற்கென்று சவுல் ஆள்களை அனுப்பியபோது தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்) 1 என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்; என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும். 2 தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். 3 ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்; நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை; பாவம் ஏதும் செய்யவில்லை; 4 என்னிடம் குற்றமில்லாதிருந்தும், அவர்கள் ஓடிவந்து என்னைத் தாக்க முனைகின்றனர்; என்னை எதிர்கொள்ளுமாறு எழுந்தருளும்; என்னைக் கண்ணோக்கும், 5 படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் இஸ்ரயேலின் கடவுள்! பிற இனத்தார் அனைவரையும் தண்டிக்க எழுந்துவாரும்; தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள் எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா) 6 அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின் நாய்களைப் போலக் குரைத்து கொண்டு நகரினுள் சுற்றித் திரிகின்றனர். 7 அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை; ‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?’ என்கின்றார்கள். 8 ஆனால், ஆண்டவரே, நீர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றீர்; பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து நீர் ஏளனம் செய்கின்றீர்; 9 நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்; ஏனெனில், கடவுளே! நீரே என் அரண். 10 என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்; கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார். 11 அவர்களை ஒரேயடியாய்க் கொன்று விடாதேயும்; இல்லையேல், உம் வல்லமையை என் மக்கள் மறந்துவிடுவர்; என் தலைவரே! எங்கள் கேடயமே! அவர்களை உமது வலிமையால் நிலைகுலையச் செய்யும். 12 அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே; அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்கவைப்பதாக! அவர்கள் சபிக்கின்றனர்; அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர். 13 ஆகவே, வெகுண்டெழுந்து அவர்களை அழித்துவிடும்; இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்; அப்பொழுது, கடவுள் யாக்கோபின் மரபினரை ஆள்கின்றார் எனவும் அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும் உள்ளது எனவும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். (சேலா) 14 அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின், நாய்களைப்போல குரைத்துக் கொண்டு நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள். 15 அவர்கள் இரைதேடி அலைகின்றனர்; வயிறு நிறையாவிடில், முறுமுறுக்கின்றனர். 16 நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர். 17 என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு! 59 தலைப்பு: 1 சாமு 19:11.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-59
537
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 60 – திருவிவிலியம்
விடுதலைக்காக மன்றாடல் (பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆராம் நகராயிம், ஆராம் சோபா என்ற அரசுகளோடு தாவீது போர் புரிகையில், யோவாபு திரும்பி வந்து உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தியபோது படிப்பினையாகத் தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்) 1 கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும். 2 நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது; 3 உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். 4 உமக்கு அஞ்சி நடப்போர் எதிரிகளின் அம்பினின்று தப்பித்துக்கொள்ளுமாறு அவர்களுக்கெனக் கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா) 5 உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்; எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்! 6 கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்; வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்; சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன். 7 கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே; எப்ராயிம் என் தலைச்சீரா; யூதா என் செங்கோல்! 8 மோவாபு எனக்குப் பாதம்கழுவும் பாத்திரம்; ஏதோமின்மீது என் மிதியடியை எறிவேன்; பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன். 9 அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம் வரை என்னைக் கூட்டிச் செல்பவர் யார்? 10 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு வீட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ! 11 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்; 12 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார். 60 தலைப்பு: 2 சாமு 8:13; 1 குறி 18:12.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-60
538
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 61 – திருவிவிலியம்
பாதுகாப்புக்காக மன்றாடல் (பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதுக்கு உரியது) 1 கடவுளே! என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். 2 பூவுலகின் கடைமுனையினின்று உம்மைக் கூப்பிடுகின்றேன்; என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது; உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும். 3 ஏனெனில் நீரே என் புகலிடம்; எதிரியின்முன் வலிமையான கோட்டை. 4 நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்; உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன். (சேலா) 5 ஏனெனில், கடவுளே! நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்; உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய உடைமையை எனக்குத் தந்தீர். 6 அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்; அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்! 7 கடவுள் முன்னிலையில் அவர் என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்! 8 உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்; நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-61
539
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 62 – திருவிவிலியம்
கடவுளின் பாதுகாப்பில் நம்பிக்கை (பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; தாவீதின் புகழ்ப்பா) 1 கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே; 2 உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். 3 ஒருவரைக் கொல்லவேண்டுமென்று நீங்கள் அனைவரும் எவ்வளவு காலம் வெறியுடன் தாக்குவீர்? நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும் சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர். 4 அவர் இருக்கும் உயர்நிலையிலிருந்து அவரைத் தள்ளிவிடத் திட்டமிடுகின்றனர்; பொய் சொல்வதில் இன்பம் காண்கின்றனர்; அவர்களது வாயில் ஆசிமொழி; அவர்களது உள்ளத்திலோ சாபமொழி. (சேலா) 5 நெஞ்சே, கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; 6 உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அரணும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். 7 என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன; என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே. 8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். (சேலா) 9 மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்; மனிதர் வெறும் மாயை; துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்; எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள். 10 பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்; கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்; செல்வம் பெருகும்போது, உள்ளத்தை அதற்குப் பறிகொடுக்காதீர். 11 ‛ஆற்றல் கடவுளுக்கே உரியது!’ என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன். 12 ‛என் தலைவரே! உண்மைப் பேரன்பு உமக்கே உரியது!’ ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்குத் தக்க கைம்மாறு நீரே அளிக்கின்றீர். 62:12 யோபு 34:11; எரே 17:10; மத் 16:27; உரோ 2:6; திவெ 2:23.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-62
540
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 63 – திருவிவிலியம்
கடவுளுக்காக ஏங்குதல் (யூதாவின் பாலைநிலத்தில் இருந்தபோது, தாவீது பாடிய புகழ்ப்பா) 1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. 2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. 4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். 6 நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். 7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. 9 என்னை அழித்துவிடத் தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர். 10 அவர்கள் வாளுக்கு இரையாவர்; நரிகளுக்கு விருந்தாவர். 11 அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்; அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும் பெருமிதம் கொள்வர்; பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும். 63 தலைப்பு: 1 சாமு 23:14.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-63
541
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 64 – திருவிவிலியம்
பாதுகாப்புக்காக வேண்டல் (பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா) 1 கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்; என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும். 2 பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும். 3 அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்; நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்; 4 மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்; அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்; 5 தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்; ‛நம்மை யார் பார்க்க முடியும்’ என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்; 6 நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்; ‛எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்’ என்கின்றார்கள்; மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை. 7 ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய, அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள். 8 தங்களது நாவினாலேயே அவர்கள் அழிவார்கள்; அவர்களைப் பார்ப்போர் அனைவரும் எள்ளி நகைப்பார்கள். 9 அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்; அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர். 10 நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்; அவரிடம் அடைக்கலம் புகுவர்; நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-64
542
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 65 – திருவிவிலியம்
நன்றிப் புகழ்ப்பா (பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பாடல்) 1 கடவுளே, சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது! உமக்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் சால்புடையது! 2 மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே! மானிடர் யாவரும் உம்மிடம் வருவர். 3 எங்கள் பாவங்களின் பளுவை எங்களால் தாங்கமுடியவில்லை; ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப் போக்குகின்றீர். 4 நீர் தேர்ந்தெடுத்து உம்மருகில் வைத்துக்கொள்ளும் மனிதர் பேறு பெற்றோர்; உம் கோவிலின் முற்றங்களில் அவர்கள் உறைந்திடுவர்; உமது இல்லத்தில், உமது திருமிகு கோவிலில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோம். 5 அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்; எங்கள் மீட்பின் கடவுளே, உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்; உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும் தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே! 6 வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர் உமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகின்றீர். 7 கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்! 8 உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் உம் அருஞ் செயல்களைக் கண்டு அஞ்சுவர்; கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக் களிகூரச் செய்கின்றீர்! 9 மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது; நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். 10 அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். 11 ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. 12 பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. 13 புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-65
543
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 66 – திருவிவிலியம்
நன்றிப் புகழ்ப்பா (பாடகர் தலைவர்க்கு: புகழ்ப்பாடல்) 1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3 கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்; 4 அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். (சேலா) 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. 6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன; கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக! (சேலா) 8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். 9 நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை. 10 கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்; 11 கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர். 12 மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்; நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர். 13 எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். 14 அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது; என் வாய் உறுதி செய்தது. 15 கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்; காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) 16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 17 அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. 18 என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார். 19 ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்; என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார். 20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! 66:6 விப 14:21; யோசு 3:14-17.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-66
544
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 67 – திருவிவிலியம்
நன்றிப் புகழ்ப்பா (பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; புகழ்ப்பாடல்) 1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா) 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா) 3 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா) 5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-67
545
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 68 – திருவிவிலியம்
இறைவனின் வெற்றிப் பவனி (பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பாடல்) 1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 2 புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போலக் கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். 3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4 கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுங்கள்; மேகங்கள்மீது வருகிறவரை வாழ்த்திப் பாடுங்கள்; ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்; அவர்முன் களிகூருங்கள். 5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6 தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்; ஆனால், அவருக்கு எதிராகக் கிளம்புவோர் வறண்ட நிலத்தில் வாழ்வர். 7 கடவுளே! நீர் உம்முடைய மக்கள் முன்சென்று பாலைவெளியில் நடைபோட்டுச் செல்கையில், (சேலா) 8 சீனாயின் கடவுள் வருகையில், பூவுலகு அதிர்ந்தது; இஸ்ரயேலின் கடவுள் வருகையில் வானம் மழையைப் பொழிந்தது. 9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். 11 என் தலைவர் செய்தி அறிவித்தார்; அச்செய்தியைப் பரப்பினோர் கூட்டமோ பெரிது; 12 ‛படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள்; புறங்காட்டி ஓடினார்கள்’! வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் கொள்ளைப்பொருள்களைப் பகிர்ந்து கொண்டார்கள். 13 நீங்கள் தொழுவங்களின் நடுவில் படுத்துக்கொண்டீர்களோ? வெள்ளியால் மூடிய புறாச் சிறகுகளும், பசும்பொன்னால் மூடிய அதன் இறகுகளும் அவர்களுக்குக் கிடைத்ததே! 14 எல்லாம் வல்லவர் அங்கே அரசர்களைச் சிதறடித்தபோது, சல்மோன் மலையில் பனிமழை பெய்தது. 15 ஓ மாபெரும் மலையே! பாசானின் மலையே! ஓ கொடுமுடி பல கொண்ட மலையே! பாசானின் மலையே! 16 ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே! கடவுள் தம் இல்லமாகத் தேர்ந்துகொண்ட இந்த மலையை நீ ஏன் பொறாமையோடு பார்க்கின்றாய்? ஆம், இதிலேதான் ஆண்டவர் என்றென்றும் தங்கி இருப்பார். 17 வலிமைமிகு தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம் கொண்ட என் தலைவர் சீனாய் மலையிலிருந்து தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார். 18 உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்; சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றீர்; மனிதரிடமிருந்தும் எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும் பரிசுகள் பெற்றுக் கொண்டீர்; கடவுளாகிய ஆண்டவர் அங்கேதான் தங்கியிருப்பார். 19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. (சேலா) 20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். 21 அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்; தம் தீய வழிகளில் துணிந்து நடப்போரின் மணிமுடியை நொறுக்குவார். 22 என் தலைவர், ‛பாசானிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்; ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன். 23 அப்பொழுது உன் கால்களை இரத்தத்தில் தோய்ப்பாய்;* உன் நாய்கள் எதிரிகளிடம் தமக்குரிய பங்கைச் சுவைக்கும்’ என்று சொன்னார். 24 கடவுளே! நீர் பவனி செல்வதை, என் கடவுளும் அரசருமானவர் தூயகத்தில் பவனி செல்வதை, அனைவரும் கண்டனர். 25 முன்னால் பாடகரும் பின்னால் இசைக்கருவிகளை வாசிப்போரும், நடுவில் தம்புரு வாசிக்கும் பெண்களும் சென்றனர். 26 மாபெரும் சபை நடுவில் கடவுளைப் போற்றுங்கள்; இஸ்ரயேலர் கூட்டத்தில் ஆண்டவரை வாழ்த்துங்கள். 27 அதோ! இளையவன் பென்யமின், அவர்களுக்கு முன்னே செல்கின்றான்; யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றார்கள்; செபுலோன் தலைவர்களும் நப்தலியின் தலைவர்களும் அங்குள்ளார்கள். 28 கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! 29 எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். 30 நாணலிடையே இருக்கும் விலங்கினைக் கண்டியும்; மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்; வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்; போர்வெறி கொண்ட மக்களினங்களைச் சிதறடியும் 31 எகிப்திலிருந்து அரச தூதர் அங்கே வருவர்; கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர். 32 உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். (சேலா) 33 வானங்களின்மேல், தொன்மைமிகு வானங்களின்மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார். 34 கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்; அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. 35 கடவுள் தம் தூயகங்களில் அஞ்சுவதற்கு உரியவராய் விளங்குகின்றார்; இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார்; கடவுள் போற்றி! போற்றி! 68:8 விப 19:18. 68:18 எபே 4:8. 68:23 ‘தோய்ப்பாய்’ என்பதற்குப் பதில் ‘உடைப்பாய்’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-68
546
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 69 – திருவிவிலியம்
உதவிக்காக வேண்டல் (பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்’ என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது) 1 கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது. 2 ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது. 3 கத்திக் கத்திக் களைத்துப்போனேன்; தொண்டையும் வறண்டுபோயிற்று; என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின; 4 காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியைவிட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க்குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? 5 கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்; என் குற்றங்கள் உமக்கு மறைவானவை அல்ல. 6 ஆண்டவரே! படைகளின் தலைவரே! உமக்காகக் காத்திருப்போர் என்னால் வெட்கமுறாதபடி செய்யும்; இஸ்ரயேலின் கடவுளே! உம்மை நாடித் தேடுகிறவர்கள் என்பொருட்டு மானக்கேடு அடையாதபடி செய்யும். 7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. 10 நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்; அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று. 11 சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்; ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன். 12 நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்; குடிகாரர் என்னைப்பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர். 13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். 14 சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும். 15 பெருவெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக! 16 ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். 17 உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்; நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்; என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும். 18 என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்; என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும். 19 என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்; என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர். 20 பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை. 21 அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். 22 அவர்களுடைய விருந்துகளே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்! அவர்களுடைய படையல் விருந்துகளே அவர்களுக்குப் பொறியாகட்டும்! 23 அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்! அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்! 24 உமது கடுஞ்சினத்தை அவர்கள்மேல் கொட்டியருளும்; உமது சினத்தீ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக! 25 அவர்களின் பாசறை பாழாவதாக! அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக! 26 நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும் கொடுமைப்படுத்துகின்றார்கள்; நீர் காயப்படுத்தினவர்களின் நோவைப் பற்றித் தூற்றித் திரிகின்றார்கள். 27 அவர்கள்மீது குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்! உமது நீதித் தீர்ப்பினின்று அவர்களைத் தப்ப விடாதேயும்! 28 மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணையிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்! அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்! 29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்; 31 காளையை விட இதுவே ஆண்டவருக்கு உகந்தது; கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட இதுவே அவருக்கு உகந்தது. 32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. 34 வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். 35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். 69:4 திபா 35:19; யோவா 15:25. 69:9 யோவா 2:17; உரோ 15:3. 69:21 மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28-29. 69:22-23 உரோ 11:9-10. 69:25 திப 1:20. 69:28 விப 32:32; திவெ 3:5; 13:8; 17:8.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-69
547
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 70 – திருவிவிலியம்
உதவிக்காக வேண்டல் (பாடகர் தலைவர்க்கு: நினைவு கூர்தலுக்காகத் தாவீது பாடியது) (திபா 40:13-17) 1 கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்! 2 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் வெட்கமும் குழப்பமும் அடைவராக! எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர் வெட்கத்தால் தலைகுனிந்து பின்னிட்டுத் திரும்புவராக! 3 என்னைப் பார்த்து, ‛ஆ! ஆ!’ என்று ஏளனம் செய்வோர் பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவராக! 4 உம்மை நாடித் தேடும் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக! நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர் ‛கடவுள் மாட்சி மிக்கவர்’ என்று எப்போதும் சொல்வர். 5 நான் சிறுமையுற்றவன், ஏழை; கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை; என்னை விடுவிப்பவர்; என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-70
548
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 71 – திருவிவிலியம்
முதியோரின் மன்றாட்டு 1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். 3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4 என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்; நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும். 5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன். 7 பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்; நீரே எனக்கு உறுதியான அடைக்கலம். 8 என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே. 9 முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். 10 ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே; என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்; 11 “கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள். 12 கடவுளே! என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் கடவுளே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 13 என்னைப் பழிப்பவர்கள் வெட்கி அழிவார்களாக! எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை இழிவும் மானக்கேடும் சூழட்டும்! 14 ஆனால், நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்; மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன். 15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது. 16 தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்; உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன். 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். 18 கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும் இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும். 19 கடவுளே, உமது நீதி வானம் வரைக்கும் எட்டுகின்றது; மாபெரும் செயல்களை நீர் செய்திருக்கிறீர்; கடவுளே, உமக்கு நிகர் யார்? 20 இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும் நான் காணுமாறு செய்த நீரே, எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்; பாதாளத்தினின்று என்னைத் தூக்கி விடுவீர். 21 என் மேன்மையைப் பெருகச் செய்து மீண்டும் என்னைத் தேற்றுவீர். 22 என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும் புகழ்வேன்; இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23 நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும். 24 என் வாழ்நாளெல்லாம் என் நா உமது நீதியை எடுத்துரைக்கும். ஏனெனில் எனக்குத் தீங்குசெய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானக்கேடும் அடைந்து விட்டார்கள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-71
549
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 72 – திருவிவிலியம்
அரசருக்காக மன்றாடல் (சாலமோனுக்கு உரியது) 1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! 3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4 எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக; பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக! 5 கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக. 6 அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக; நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக. 7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். 9 பாலைவெளி வாழ்வோர் அவர்முன் குனிந்து வணங்குவர்; அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள். 10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். 12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். 14 அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது. 15 அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! 16 நாட்டில் தானியம் மிகுந்திடுக! மலைகளின் உச்சிகளில் பயிர்கள் அசைந்தாடுக! லெபனோனைப்போல் அவை பயன் தருக! வயல்வெளிப் புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக! 17 அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! 18 ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்! 19 மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப்பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். 20 (ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுகள் நிறைவுற்றன.) 72:8 செக் 9:10.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-72
550
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 73 – திருவிவிலியம்
மூன்றாம் பகுதி (73-89) கடவுளின் நீதிமுறை (ஆசாபின் புகழ்ப்பா) 1 உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! தூய உள்ளத்தினர்க்கு ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்! 2 என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின; நான் அடிசறுக்கி விழப்போனேன். 3 ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்; பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன். 4 அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை; அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது. 5 மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை. 6 எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது; வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது. 7 அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன; அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன. 8 பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்; இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர். 9 விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது; மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது. 10 ஆதலால், கடவுளின் மக்களும் அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்; இவ்வாறு, கடல் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள். 11 ‘இறைவனுக்கு எப்படித் தெரியும்? உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’ என்கின்றார்கள். 12 ஆம்; பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்; என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர். 13 அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா? 14 நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்; காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன். 15 “நானும் அவர்களைப்போல் பேசலாமே” என்று நான் நினைத்திருந்தால், உம் மக்களின் தலைமுறைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன். 16 ஆகவே, இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன்; ஆனால், அது பெரிய புதிராயிருந்தது. 17 நான் இறைவனின் தூயகத்திற்குச் சென்றபின்புதான் அவர்களுக்கு நேரிடப்போவது என்ன என்பதை உணர்ந்துகொண்டேன். 18 உண்மையில் அவர்களை நீர் சறுக்கலான இடங்களில் வைப்பீர்; அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குவீர். 19 அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்! 20 விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்; என் தலைவராகிய ஆண்டவரே, நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர். 21 என் உள்ளம் கசந்தது; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின. 22 அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடனானேன்; உமது முன்னிலையில் ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன். 23 ஆனாலும், நான் எப்போதும் உமது முன்னிலையிலேதான் இருக்கின்றேன்; என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர். 24 உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்; முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர். 25 விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறு விருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை. 26 எனது உடலும் உள்ளமும் நைந்து போயின; கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார். 27 உண்மையிலேயே, உமக்குத் தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்; உம்மைக் கைவிடும் அனைவரையும் அழித்துவிடும். 28 நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்; என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-73
551
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 74 – திருவிவிலியம்
நாட்டின் விடுதலைக்காக மன்றாடல் (ஆசாபின் அறப்பாடல்) 1 கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது? 2 பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக் கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும். 3 நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள். 4 உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள். 5 அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப்பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள். 6 மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்; 7 அவர்கள் உமது தூயகத்திற்குத் தீ வைத்தார்கள்; தரைமட்டமாக்கினார்கள். அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். 8 “அவர்களை அடியோடு அழித்து விடுவோம்” என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டார்கள்; கடவுளின் சபையார் கூடும் இடங்களையெல்லாம் நாடெங்கும் எரித்தழித்தார்கள். 9 எங்களுக்கு நீர் செய்து வந்த அருஞ்செயல்களை இப்போது நாங்கள் காண்பதில்லை; இறைவாக்கினரும் இல்லை; எவ்வளவு காலம் இந்நிலை நீடிக்குமென்று அறியக் கூடியவரும் எங்களிடையே இல்லை. 10 கடவுளே! எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்? எதிரிகள் உமது பெயரை எப்போதுமா பழித்துக் கொண்டிருப்பார்கள்? 11 உமது கையை ஏன் மடக்கிக் கொள்கின்றீர்? உமது வலக்கையை ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்? அதை நீட்டி அவர்களை அழித்துவிடும். 12 கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர். 13 நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்தீர்; நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலைகளை நசுக்கிவிட்டீர். 14 லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரே; அதைக் காட்டு விலங்குகளுக்கு இரையாகக் கொடுத்தவர் நீரே; 15 ஊற்றுகளையும் ஓடைகளையும் பாய்ந்து வரச்செய்தவர் நீரே; என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்துபோகச் செய்தவரும் நீரே. 16 பகலும் உமதே; இரவும் உமதே; கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே. 17 பூவுலகின் எல்லைகளையெல்லாம் வரையறை செய்தீர்; கோடைக் காலத்தையும் மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர். 18 ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும் மதிகெட்ட மக்கள் உமது பெயரைப் பழிப்பதையும் நினைத்துப்பாரும்! 19 உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பொல்லாத விலங்கிடம் ஒப்புவித்து விடாதேயும்! சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை ஒரேயடியாக மறந்து விடாதேயும்! 20 உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன. 21 சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக! 22 கடவுளே! எழுந்துவாரும்; உமக்காக நீரே வழக்காடும்; மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும் இகழ்ச்சியை நினைத்துப்பாரும். 23 உம்முடைய பகைவர் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்; உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும் அமளியைக் கேளும். 74:13 விப 14:21. 74:14 யோபு 41:1; திபா 104:26; எசா 27:1.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-74
552
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 75 – திருவிவிலியம்
நீதி வழங்கும் கடவுள் (பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பாடல்) 1 உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; கடவுளே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; உமது பெயரைப் போற்றுகின்றோம்; உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம். 2 நான் தகுந்த வேளையைத் தேர்ந்துகோண்டு, நீதியோடு தீர்ப்பு வழங்குவேன். 3 உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும் நிலைகுலைந்து போகலாம்; ஆனால், நான் அதன் தூண்களை உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா) 4 வீண் பெருமை கொள்வோரிடம், ‛வீண் பெருமை கொள்ள வேண்டாம்’ எனவும் பொல்லாரிடம், ‛உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்; 5 உங்கள் ஆற்றலைச் சிறிதளவும் காட்டிக்கொள்ள வேண்டாம்; தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்;’ எனவும் சொல்வேன். 6 கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ, பாலைவெளியிலிருந்தோ, மலைகளிலிருந்தோ, உங்களுக்கு எதுவும் வராது. 7 ஆனால், கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்; அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவரை உயர்த்துகின்றார். 8 ஏனெனில், மதிமயக்கும் மருந்து கலந்த திராட்சை மது பொங்கிவழியும் ஒரு பாத்திரம் ஆண்டவர் கையில் இருக்கின்றது; அதிலிருந்து அவர் மதுவை ஊற்றுவார்; உலகிலுள்ள பொல்லார் அனைவரும் அதை முற்றிலும் உறிஞ்சிக் குடித்துவிடுவர். 9 நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்; யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்; 10 பொல்லாரை அவர் வலிமை இழக்கச் செய்வார்; நேர்மையாளரின் ஆற்றலோ உயர்வுபெறும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-75
553
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 76 – திருவிவிலியம்
வெற்றிப் பாடல் (பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன் ஆசாபின் புகழ்ப்பாடல்) 1 யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்; இஸ்ரயேலில் அவரது பெயர் மாண்புடன் திகழ்கின்றது. 2 எருசலேமில் அவரது கூடாரம் இருக்கின்றது; சீயோனில் அவரது உறைவிடம் இருக்கின்றது. 3 அங்கே அவர் மின்னும் அம்புகளை முறித்தெறிந்தார். கேடயத்தையும் வாளையும் படைக்கலன்களையும் தகர்த்தெறிந்தார். (சேலா) 4 ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்; உமது மாட்சி என்றுமுள மலைகளினும் உயர்ந்தது. 5 நெஞ்சுறுதி கொண்ட வீரர் கொள்ளையிடப்பட்டனர்; அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்; அவர்களின் கைகள் போர்க்கலன்களைத் தாங்கும் வலுவிழந்தன. 6 யாக்கோபின் கடவுளே, உமது கடிந்துரையால் குதிரைகளும் வீரர்களும் மடிந்து விழுந்தனர். 7 ஆண்டவரே, நீர் அஞ்சுதற்கு உரியவர்; நீர் சினமுற்ற வேளையில் உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்? 8-9 கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க நீர் எழுந்தபோது, மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக் காக்க விழைந்தபோது, வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்; பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா) 10 மாறாக, சினமுற்ற மாந்தர், உம்மைப் புகழ்தேத்துவர்; உமது கோபக் கனலுக்குத் தப்பியோர் உமக்கு விழாக்கொண்டாடுவர்; 11 உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனை செய்து அதை நிறைவேற்றுங்கள்; அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும் அஞ்சுதற்குரிய அவருக்கே காணிக்கைகளைக் கொண்டு வருவராக! 12 செருக்குற்ற தலைவர்களை அவர் அழிக்கின்றார்; பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-76
554
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 77 – திருவிவிலியம்
துன்ப நாளில் ஆறுதல் (பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; ஆசாபின் புகழ்ப்பா) 1 கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன். 2 என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கைகூப்பினேன்; ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை. 3 கடவுளை நினைத்தேன்; பெருமூச்சு விட்டேன்; அவரைப்பற்றி சிந்தித்தேன்; என் மனம் சோர்வுற்றது. (சேலா) 4 என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்; நான் கலக்கமுற்றிருக்கிறேன்; என்னால் பேச இயலவில்லை. 5 கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்; முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன். 6 இரவில் என் பாடலைப்பற்றி நினைத்துப் பார்த்தேன்; என் இதயத்தில் சிந்தித்தேன்; என் மனம் ஆய்வு செய்தது; 7 ‘என் தலைவர் என்றென்றும் கைவிட்டுவிடுவாரோ? இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ? 8 அவரது பேரன்பு முற்றிலும் மறைந்துவிடுமோ? அவரது வாக்குறுதி தலைமுறைதோறும் அற்றுப்போய்விடுமோ? 9 கடவுள் இரக்கங்காட்ட மறந்துவிட்டாரோ? அல்லது சினங்கொண்டு தமது இரக்கத்தை நிறுத்திவிட்டாரோ?’ (சேலா) 10 அப்பொழுது நான், ‘உன்னதரின் வலக்கை மாறுபட்டுச் செயலாற்றுவது என்னை வருத்துகின்றது’ என்றேன். 11 ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்; முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன். 12 உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன். 13 கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்! 14 அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே; 15 யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக் கொண்டீர். (சேலா) 16 கடவுளே, வெள்ளம் உம்மைப் பார்த்தது; வெள்ளம் உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது; ஆழ்கடல்களும் கலக்கமுற்றன. 17 கார்முகில்கள் மழை பொழிந்தன; மேகங்கள் இடிமுழங்கின; உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன. 18 உமது இடிமுழக்கம் கடும்புயலில் ஒலித்தது; மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின; மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது. 19 கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்; வெள்ளத்திரளிடையே உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்; ஆயினும் உம் அடிச்சுவடுகள் எவருக்கும் புலப்படவில்லை. 20 மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-77
555
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 78 – திருவிவிலியம்
கடவுளும் அவர்தம் மக்களும் (ஆசாபின் அறப்பாடல்) 1 என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். 2 நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன். 3 நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை – இவற்றை உரைப்போம். 4 அவர்களின் பிள்ளைகளுக்கு நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்; வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். 5 யாக்கோபுக்கென அவர் நியமங்களை வகுத்தார்; இஸ்ரயேலுக்கெனத் திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்; இதனையே தம் பிள்ளைகளுக்கும் கற்பிக்குமாறு நம் மூதாதையர்க்கு அவர் கட்டளையிட்டார். 6 வரவிருக்கும் தலைமுறையினர் இவற்றை அறிந்திடவும், இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் – இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும், 7 அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், 8 தங்கள் மூதாதையரைப்போல், எதிர்ப்பு மனமும், அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும் இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார். 9 வில் வீரரான எப்ராயிம் மக்கள், போரில் புறங்காட்டி ஓடினர். 10 அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை; அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற மறுத்துவிட்டனர். 11 அவர்தம் செயல்களையும் அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும் அவர்கள் மறந்தனர். 12 எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில் அவர்களின் மூதாதையர் காணுமாறு அவர் வியத்தகு செயல்கள் பல புரிந்தார்; 13 கடலைப் பிரித்து அவர்களை வழிநடத்தினார்; தண்ணீரை அணைக்கட்டுப்போல நிற்கும்படி செய்தார்; 14 பகலில் மேகத்தினாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் அவர்களை வழி நடத்தினார். 15 பாலைநிலத்தில் பாறைகளைப் பிளந்தார்; ஆழத்தினின்று பொங்கிவருவது போன்ற நீரை அவர்கள் நிறைவாகப் பருகச் செய்தார்; 16 பாறையினின்று நீரோடைகள் வெளிப்படச் செய்தார்; ஆறுகளென நீரை அவர் பாய்ந்தோடச் செய்தார். 17 ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்; வறண்ட நிலத்தில் உன்னதருக்கு எதிராய் எழுந்தனர். 18 தம் விருப்பம்போல் உணவு கேட்டு வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தனர். 19 அவர்கள் கடவுளுக்கு எதிராக இவ்வாறு பேசினார்கள்: ‘பாலை நிலத்தில் விருந்தளிக்க இறைவனால் இயலுமா? 20 உண்மைதான்! அவர் பாறையை அதிரத் தட்டினார்; நீர் பாய்ந்து வந்தது; ஆறுகள் கரைபுரண்டு ஓடின. ஆயினும், அப்பமளிக்க இயலுமா அவரால்? தம் மக்களுக்கு இறைச்சி தர முடியுமா?’ 21 எனவே, இதைக் கேட்ட ஆண்டவர் சினங்கொண்டார்; நெருப்பு யாக்கோபுக்கு எதிராய்க் கிளர்ந்தெழுந்தது. இஸ்ரயேல்மீது அவரது சினம் பொங்கியெழுந்தது. 22 ஏனெனில், அவர்கள் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளவில்லை; அவர் காப்பார் என்று நம்பவில்லை. 23 ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். 24 அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். 25 வான தூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார். 26 அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை இறங்கிவரச் செய்தார்; தம் ஆற்றலினால் தென்காற்றை அழைத்துவந்தார். 27 அவர் இறைச்சியைத் துகள்துகளென அவர்கள்மீது பொழிந்தார்; இறகுதிகழ் பறவைகளைக் கடற்கரை மணலென வரவழைத்தார். 28 அவற்றை அவர்தம் பாளையத்தின் நடுவிலும் கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார். 29 அவர்கள் உண்டனர்; முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; அவர்கள் விரும்பியவற்றையே அவர் அவர்களுக்கு அளித்தார். 30 அவர்களது பெருந்தீனி வேட்கை தணியுமுன்பே, அவர்கள் வாயிலில் உணவு இருக்கும் பொழுதே, 31 கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக மூண்டெழுந்தது; அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்; இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார். 32 இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; அவர்தம் வியத்தகு செயல்களில் நம்பிக்கை கொள்ளவில்லை. 33 ஆகையால், அவர்களது வாழ்நாளை மூச்சென மறையச் செய்தார்; அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால் முடிவுறச் செய்தார். 34 அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர். 35 கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர். 36 ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள். 37 அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. 38 அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை. 39 அவர்கள் வெறும் சதையே என்பதையும் திரும்பி வராத காற்று என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். 40 பாலை நிலத்தில் அவர்கள் எத்தனையோமுறை அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்! வறண்ட நிலத்தில் அவர் மனத்தை வருத்தினர்! 41 இறைவனை அவர்கள் மீண்டும் மீண்டும் சோதித்தனர்; இஸ்ரயேலின் தூயவருக்கு எரிச்சலூட்டினர். 42 அவரது கைவன்மையை மறந்தனர்; எதிரியிடமிருந்து அவர் அவர்களை விடுவித்த நாளையும் மறந்தனர்; 43 அந்நாளில் எகிப்தில் அவர் அருஞ்செயல்கள் செய்தார்; சோவான் சமவெளியில் வியத்தகு செயல்கள் புரிந்தார். 44 அவர்களின் ஆறுகளைக் குருதியாக மாற்றினார்; எனவே, தங்கள் ஓடைகளினின்று அவர்களால் நீர் பருக இயலவில்லை. 45 அவர்களை விழுங்குமாறு அவர்கள்மீது ஈக்களையும், அவர்களது நாட்டை அழிக்குமாறு தவளைகளையும் அவர் அனுப்பினார். 46 அவர்களது விளைச்சலைப் பச்சைப் புழுக்களுக்கும் அவர்களது உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார். 47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும் உறைபனியால் அவர்களுடைய அத்தி மரங்களையும் அவர் அழித்தார். 48 அவர்களுடைய கால்நடைகளைக் கல்மழையிடமும் அவர்களுடைய ஆடுமாடுகளை இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார். 49 தம் சினத்தையும், சீற்றத்தையும் வெஞ்சினத்தையும் இன்னலையும் – அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை – அவர் ஏவினார். 50 அவர் தமது சினத்திற்கு வழியைத் திறந்துவிட்டார்; அவர்களைச் சாவினின்று தப்புவிக்கவில்லை; அவர்களின் உயிரைக் கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார். 51 எகிப்தின் அனைத்துத் தலைப்பேறுகளையும் ‛காம்’ கூடாரங்களில் ஆண் தலைப்பேறுகளையும் அவர் சாகடித்தார். 52 அவர்தம் மக்களை ஆடுகளென வெளிக்கொணர்ந்தார்; பாலைநிலத்தில் அவர்களுக்கு மந்தையென வழி காட்டினார். 53 பாதுகாப்புடன் அவர்களை அவர் அழைத்துச் சென்றார்; அவர்கள் அஞ்சவில்லை; அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூடிக்கொண்டது. 54 அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். 55 அவர்கள் முன்னிலையில் வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்; அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்; இஸ்ரயேல் குலங்களை அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார். 56 ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை. 57 தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர். 58 தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்; தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர். 59 கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார்; 60 சீலோவில் அழைந்த தம் உறைவிடத்தினின்று வெளியேறினார்; மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த கூடாரத்தினின்று அகன்றார்; 61 தம் வலிமையை* அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்; தம் மாட்சியை* எதிரியிடம் ஒப்புவித்தார்; 62 தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச்சொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார். 63 அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது; அவர்களுடைய கன்னியர்க்குத் திருமணப் பாடல் இல்லாது போயிற்று. 64 அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்; அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு ஒப்பாரி வைக்க வழியில்லை. 65 அப்பொழுது, உறக்கத்தினின்று எழுவோரைப்போல், திராட்சை மதுவால் களிப்புறும் வீரரைப்போல் எம் தலைவர் விழித்தெழுந்தார். 66 அவர் தம் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தார்; அவர்களை என்றென்றும் இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார். 67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்ராயிம் குலத்தைத் தேர்வு செய்யவில்லை. 68 ஆனால், யூதாவின் குலத்தை, தமக்கு விருப்பமான சீயோன் மலையை அவர் தேர்ந்துகொண்டார். 69 தம் திருத்தலத்தை உயர் விண்ணகம்போல் அவர் அமைத்தார்; மண்ணுலகத்தில்* என்றும் நிலைத்திருக்குமாறு எழுப்பினார். 70 அவர் தாவீதைத் தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்; ஆட்டு மந்தைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார். 71 இறைவன் தம் மக்களான யாக்கோபை, தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை, பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய தாவீது மேய்க்குமாறு செய்தார். 72 அவரும் நேரிய உள்ளத்தோடு அவர்களைப் பேணினார்; கைவன்மையாலும் அறிவுத் திறனாலும் அவர்களை வழிநடத்தினார். 78:12 விப 7:8-12:35. 78:13 விப 14:21-22. 78:14 விப 13:21-23. 78:15-16 விப 17:1-7; எண் 20:2-13. 78:18-31 விப 16:2-15; எண் 11:4-23; 31-35. 78:24 யோவா 6:31. 78:44 விப 7:17-21. 78:45 விப 8:1-6; 22-24. 78:46 விப 10:12-15. 78:47-48 விப 9:22-25. 78:51 விப 12:29. 78:52 விப 13:17-22. 78:53 விப 14:26-28. 78:54 விப 15:17; யோசு 3:14-17. 78:55 யோசு 11:16-23. 78:56 நீதி 2:11-15. 78:60 யோசு 18:1; எரே 7:12-14; 26:6. 78:61 1 சாமு 4:4-22. 78:70-71 1 சாமு 16:11-12; 2 சாமு 7:8; 1 குறி 17:7. 78:61 * “தம் வலிமையை” மற்றும் “தம் மாட்சியை” என்னும் சொற்கள் உடன்படிக்கைப் பேழையைக் குறிக்கும். (காண். 1 சாமு 4:1-22). 78:69 * ‘மண்ணகம் போல்’ என்பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-78
556
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 79 – திருவிவிலியம்
நாட்டின் விடுதலைக்காக மன்றாடல் (ஆசாபின் புகழ்ப்பா) 1 கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்; எருசலேமைப் பாழடையச் செய்தனர். 2 உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள்; 3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை. 4 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம். 5 ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? 6 உம்மை அறியாத வேற்று நாட்டினர்மீது, உமது பெயரைத் தொழாத அரசர்கள்மீது உம் சினத்தைக் கொட்டியருளும். 7 ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்; அவரது உறைவிடத்தைப் பாழாக்கி விட்டார்கள். 8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். 9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். 10 ‛அவர்களின் கடவுள் எங்கே?’ என்று அண்டை நாட்டினர் ஏன் சொல்லவேண்டும்? உம்முடைய ஊழியரின் இரத்தத்தைச் சிந்தியதற்காக நீர் அவர்களை, என் கண்ணெதிரே, பழிதீர்த்தருளும். 11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. 12 ஆண்டவரே, எம் அண்டை நாட்டார் உம்மைப் பழித்துரைத்த இழிச்சொல்லுக்காக, ஏழு மடங்கு தண்டனை அவர்கள் மடியில் விழச்செய்யும். 13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். 79:1 2 அர 25:8-10; 2 குறி 36:17-19; எரே 52:12-14.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-79
557
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 80 – திருவிவிலியம்
நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல் (பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா) 1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! 2 எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! 3 கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! 4 படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்? 5 கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர். 6 எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள். 7 படைகளின் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். 8 எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர். 9 அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்; அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது. 10 அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின. 11 அதன் கொடிகள் கடல்வரையும்* அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின. 12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச் செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! 13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன. 14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! 16 அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக! 17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். 19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! 80:1 விப 25:22. 80:11 *மத்திய தரைக் கடல், **யூப்பிரத்தீசு.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-80
558
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 81 – திருவிவிலியம்
திருவிழாப் பாடல் (பாடகர் தலைவனுக்கு: ‘காத்து’ நகர்ப்பண்; ஆசாபுக்கு உரியது) 1 நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்; யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து ஏத்துங்கள். 2 இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும் சுரமண்டலமும் இசைந்து இனிமையாய்ப் பாடுங்கள். 3 அமாவாசையில், பௌர்ணமியில், நமது திருவிழாநாளில் எக்காளம் ஊதுங்கள். 4 இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி. 5 அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன். 6 தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன. 7 துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன்; இடிமுழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீருற்று அருகில் உங்களைச் சோதித்தேன். (சேலா) 8 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்! 9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. 10 உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்துவந்த கடவுளாகிய ஆண்டவர் நானே; உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்; நான் அதை நிரப்புவேன். 11 ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை. 12 எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடம் அவர்களை விட்டுவிட்டேன். 13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும். 14 நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். 15 ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும். 16 ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். 81:3 எண் 10:10. 81:7 விப 17:7; எண் 20:13. 81:9-10 விப 20:2-3; இச 5:6-7.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-81
559
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 82 – திருவிவிலியம்
அனைத்து உலகின் அரசர் (ஆசாபின் புகழ்ப்பா) 1 தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்; தெய்வங்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்குகின்றார். 2 ‛எவ்வளவு காலம் நீங்கள் நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்? எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்? (சேலா) 3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்! 4 எளியோரையும் வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்! 5 உங்களுக்கு அறிவுமில்லை; உணர்வுமில்லை; நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்; பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன. 6 ‛நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள். 7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர் போல வீழ்வீர்கள்’ என்றேன். 8 கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்; ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம். 82:6 யோவா 10:34.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-82
560
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 83 – திருவிவிலியம்
இஸ்ரயேலின் எதிரிகளது வீழ்ச்சிக்காக மன்றாடல் (ஆசாபின் புகழ்ப்பாடல்) 1 கடவுளே! மௌனமாய் இராதேயும்; பேசாமல் இராதேயும்; இறைவனே! அமைதியாய் இராதேயும். 2 ஏனெனில், உம் எதிரிகள் அமளி செய்கின்றார்கள்; உம்மை வெறுப்போர் தலைதூக்குகின்றார்கள். 3 உம் மக்களுக்கு எதிராக வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்; உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள். 4 அவர்கள் கூறுகின்றார்கள்; ‛ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்; இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.’ 5 அவர்கள் ஒருமனப்பட்டுச் சதி செய்கின்றார்கள்; உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்கள். 6 ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர், மோவாபியர், அக்ரியர், 7 கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் மற்றும் தீர்வாழ் மக்களே அவர்கள். 8 அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு, லோத்தின் மைந்தருக்கு வலக்கையாய் இருந்தனர். (சேலா) 9 மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல, அவர்களுக்கும் செய்தருளும். 10 அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்; அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள். 11 ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்ததுபோல் அவர்களின் உயர்குடி மக்களுக்கும் செய்தருளும்! செபாருக்கும் சல்முன்னாவுக்கும் செய்ததுபோல் அவர்களின் தலைவர்களுக்கும் செய்தருளும். 12 ஏனெனில், ‛கட‌வுளின் மேய்ச்சல் நிலத்தை நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்’ என்று அவர்கள் கூறினார்கள். 13 என் கடவுளே! சூறாவளியில் புழுதியென, காற்றில் பதரென அவர்களை ஆக்கியருளும். 14 நெருப்பு காட்டை எரிப்பது போலவும், தீக்கனல் மலைகளைச் சுட்டெரிப்பது போலவும் அவர்களுக்குச் செய்தருளும். 15 உமது புயலால் அவர்களைத் துரத்திவிடும்! உமது சூறாவளியால் அவர்களைத் திகிலடையச் செய்யும். 16 ஆண்டவரே, மானக்கேட்டினால் அவர்கள் முகத்தை மூடும்; அப்பொழுதுதான் அவர்கள் உமது பெயரை நாடுவார்கள். 17 அவர்கள் என்றென்றும் வெட்கிக் கலங்குவார்களாக! நாணமுற்று அழிந்து போவார்களாக! 18 ‛ஆண்டவர்’ என்னும் பெயர் தாங்கும் உம்மை, உலகனைத்திலும் உன்னதரான உம்மை, அவர்கள் அறிந்து கொள்வார்களாக! 83:9 நீத 4:6-22; 7:1-23. 83:11 நீத 7:25; 8:12.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-83
561
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 84 – திருவிவிலியம்
திருக்கோவிலுக்காக ஏங்குதல் (பாடகர் தலைவர்க்கு: ‛காத்து’ நகர்ப் பண்; கோராகியரின் புகழ்ப்பா) 1 படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! 2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. 3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. 4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா) 5 உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. 6 வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்கையில், அது நீருற்றுகள் உள்ள இடமாக மாறுகின்றது; முதல் பருவமழை அதனை நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும். 7 அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள்; பின்பு, சீயோனின் தெய்வங்களின் இறைவனைக் காண்பார்கள். 8 படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா) 9 எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்! 10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. 11 ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். 12 படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்!
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-84
562
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 85 – திருவிவிலியம்
நாட்டின் நலனுக்காக மன்றாடல் (பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா) 1 ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர். 2 உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். (சேலா) 3 உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்; கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். 4 எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக்கொள்ளும். 5 என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்? 6 உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ? 7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். 8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது. 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். 10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். 12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-85
563
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 86 – திருவிவிலியம்
உதவிக்காக வேண்டல் (தாவீதின் மன்றாட்டு) 1 ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். 2 என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். 3 என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நான் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். 5 ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். 7 என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர். 8 என் தலைவரே! தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை. உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை. 9 என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். 10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! 11 ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும். 12 என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்; என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன். 13 ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்! 14 கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்; கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது; அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை. 15 என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். 16 என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். 17 நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்; என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்; ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர். 86:9 திவெ 15:4.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-86
564
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 87 – திருவிவிலியம்
பெருமை மிகு எருசலேம் (கோராகியரின் புகழ்ப்பாடல்) 1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா) 4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‛இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும். 5 ‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும். 6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார். (சேலா) 7 ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‛எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-87
565
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 88 – திருவிவிலியம்
உதவிக்காக வேண்டல் (கோராகியரின் புகழ்ப்பாடல்; பாடகர் தலைவர்க்கு: ‘நோயின் துயரில்’ என்ற மெட்டு; எஸ்ராகியரான ஏமானின் அறப்பாடல்) 1 ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன். 2 என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்! 3 ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது; என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது. 4 படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப்படுகின்றேன்; வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன். 5 இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்; கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்; அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை; அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள். 6 ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டு விட்டீர். 7 உமது சினம் என்னை அழுத்துகின்றது; உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. (சேலா) 8 எனக்கு அறிமுகமானவர்களை என்னைவிட்டு விலகச்செய்தீர்; அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன். 9 துயரத்தினால் என் கண் மங்கிப்போயிற்று; ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன். 10 இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? (சேலா) 11 கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா? 12 இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா? 13 ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன். 14 ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்? 15 என் இளமைமுதல் நான் துன்புற்று மடியும் நிலையில் உள்ளேன்; உம்மால் வந்த பெருந் திகிலால் தளர்ந்து போனேன். 16 உமது வெஞ்சினம் என்னை மூழ்கடிக்கின்றது; உம் அச்சந்தரும் தாக்குதல்கள் என்னை அழிக்கின்றன. 17 அவை நாள் முழுவதும் வெள்ளப்பெருக்கென என்னைச் சூழ்ந்து கொண்டன; அவை எப்பக்கமும் என்னை வளைத்துக்கொண்டன. 18 என் அன்பரையும் தோழரையும் என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நெருங்கிய நண்பன்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-88
566
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 89 – திருவிவிலியம்
நாடு இடருற்றபோது பாடியது (எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்) 1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. 3 நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா) 5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும். 6 வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? 7 தூயவர் குழுவில் அவர் அஞ்சுதற்குரிய இறைவன்; அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர். 8 படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்? ஆண்டவரே! உம் உண்மை உம்மைச் சூழ்ந்துள்ளது. 9 கொந்தளிக்கும் கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர்; பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர். 10 இராகாபைப் பிணமென நசுக்கினீர்; உம் எதிரிகளை உம் வலிய புயத்தால் சிதறடித்தீர். 11 வானமும் உமதே! வையமும் உமதே! பூவுலகையும் அதில் நிறைந்துள்ள அனைத்தையும் நிலைநிறுத்தியவர் நீரே! 12 வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே! தாபோரும் எர்மோனும் உம் பெயரைக் களிப்புடன் புகழ்கின்றன. 13 வன்மைமிக்கது உமது புயம்; வலிமைகொண்டது உமது கை; உயர்ந்து நிற்பது உம் வலக்கை; 14 நீதியும் நேர்மையும் உம் அரியணைக்கு அடித்தளம்; பேரன்பும் உண்மையும் உமக்கு முன்னே செல்லும். 15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள்முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். 17 ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. 18 நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதி 19 முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: “வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். 20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன். 21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். 22 எதிரி எவனாலும் அவனை வஞ்சிக்க முடியாது; தீயவன் எவனாலும் அவனை ஒடுக்க இயலாது. 23 அவனுடைய எதிரிகளை அவன் கண்முன் நசுக்குவேன்; அவனை வெறுப்போரை வெட்டிக் கொல்வேன். 24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும். 25 அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். 26 ‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். 27 நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். 29 அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். 30 அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ, 31 என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடிலோ, 32 அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்; அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன்; 33 ஆயினும், என் பேரன்பை தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்; என் வாக்குப்பிறாழாமையினின்று வழுவமாட்டேன். 34 என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன். 35 ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்; ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன். 36 அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்; அவனது அரியணை கதிரவன் உள்ளளவும் என்முன் நிலைக்கும். 37 அது விண்ணின் உண்மையான சான்றென உறுதியாயிருக்கும்; நிலாவென என்றென்றும் நிலைத்திருக்கும்.” (சேலா) அரசரின் தோல்வி குறித்துப் புலம்பியது 38 ஆயினும், திருப்பொழிவு பெற்றவரை இப்போது நீர் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்; அவர்மீது கடுஞ்சினம் கொண்டுள்ளீர். 39 உம் ஊழியருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்; அவரது மணிமுடியைப் புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர். 40 அவருடைய மதில்களைத் தகர்த்துவிட்டீர்; அவருடைய அரண்களைப் பாழடையச் செய்தீர். 41 வழிப்போக்கர் அனைவரும் அவரைக் கொள்ளையிடுகின்றனர்; அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு அவர் ஆளானார். 42 அவருடைய எதிரிகளின் கை ஓங்கச் செய்தீர்; அவருடைய பகைவர் அனைவரும் அக்களிக்கச் செய்தீர். 43 அவரது வாளின் முனையை வளைத்துவிட்டீர்; போரில் அவரால் எதிர்த்து நிற்க முடியாதபடி செய்தீர். 44 அவரது மாட்சி அவரைவிட்டு விலகச் செய்தீர்; அவரது அரியணையைக் கீழே தள்ளிவிட்டீர், 45 அவரது இளமையைச் சுருக்கிவிட்டீர்; அவருக்கு வெட்கத்தை ஆடையாக்கினீர். (சேலா) விடுதலைக்காக வேண்டல் 46 எவ்வளவு காலம் மறைந்திருப்பீர் ஆண்டவரே! என்றென்றுமா? எவ்வளவு காலம் உமது சினம் நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்? 47 எங்கள் ஆயுள் எவ்வளவு குறுகியது என்பதை நினைத்தருளும்; மானிடர் அனைவரையும் வீணாகவா படைத்துள்ளீர்? 48 என்றும் சாவைக் காணாமல் இருப்பவர் எவர்? பாதாளத்தின் பிடியினின்று தன்னைக் காத்துக் கொள்பவர் எவர்? (சேலா) 49 என் தலைவரே! தொடக்க காலத்தில் நீர் காட்டிய பேரன்பு எங்கே? தாவீதுக்கு உமது வாக்குப் பிறாழாமையை முன்னிட்டு உறுதியாகக் கூறியது எங்கே? 50 என் தலைவரே! உம் ஊழியர்மீது சுமத்தப்படும் பழியை நினைத்துப்பாரும்; மக்களினங்களின் பழிச்சொற்கள் அனைத்தையும் என் நெஞ்சில் தாங்குகிறேன். 51 ஆண்டவரே! உம் எதிரிகள் அவர் மேல் பழி சுமத்துகின்றனர்; அவர்கள் உம்மால் திருப்பொழிவு பெற்றவரைச் சென்றவிடமெல்லாம் தூற்றுகின்றனர். 52 ஆண்டவர் என்றென்றும் புகழப்பெறுவாராக! ஆமென், ஆமென். 89:4 2 சாமு 7:12-16; 1 குறி 17:11-14; திபா 132:11; திப 2:30. 89:20 1 சாமு 13:14; 16:12; திப 13:22. 89:27 திவெ 1:5. 89 தலைப்பு: 1 அர 4:31.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-89
567
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 90 – திருவிவிலியம்
நான்காம் பகுதி (90-106) மனிதரின் நிலையாமை (கடவுளின் அடியார் மோசேயின் மன்றாட்டு) 1 என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர். 2 மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! 3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. 5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும். 7 உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்; உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம். 8 எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்; மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர். 9 எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன; எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன. 10 எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம். 11 உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்? உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்? 12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். 14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும். 16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-90
568
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 91 – திருவிவிலியம்
நம்மைப் பாதுகாக்கும் இறைவன் 1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, “நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்” என்று உரைப்பார். 3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். 4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். 5 இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். 6 இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். 7 உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது. 8 பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்; உம் கண்ணாலேயே நீர் காண்பீர். 9 ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்; உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர். 10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். 12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். 13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். 14 ‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; 15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; 16 நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.’ 91:11 மத் 4:6; லூக் 4:10. 91:12 மத் 4:6; லூக் 4:11. 91:13 லூக் 10:19.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-91
569
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 92 – திருவிவிலியம்
புகழ்ச்சிப்பாடல் (ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்) 1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. 2 காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் 3 பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று. 4 ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்; உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன். 5 ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை; உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை. 6 அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே: 7 பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்; தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே; 8 நீரோ ஆண்டவரே! என்றுமே உயர்ந்தவர். 9 ஏனெனில், ஆண்டவரே! உம் எதிரிகள் – ஆம், உம் எதிரிகள் – அழிவது திண்ணம்; தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர். 10 காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்; புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர். 11 என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்; எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன். 12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். 13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். 14 அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; 15 ‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-92
570
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 93 – திருவிவிலியம்
கடவுளின் அரசாட்சி 1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். 3 ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன; ஆறுகள் இரைச்சலிட்டன; ஆறுகள் ஆரவாரம் செய்தன. 4 பெருவெள்ளத்தின் இரைச்சலையும் கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட ஆண்டவர் வலிமை மிக்கவர்; அவரே உன்னதத்தில் உயர்ந்தவர். 5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-93
571
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 94 – திருவிவிலியம்
ஆண்டவரே அனைவரின் நீதிபதி 1 அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா! ஆண்டவரே! அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா, ஒளிர்ந்திடும்! 2 உலகின் நீதிபதியே, எழுந்தருளும்; செருக்குற்றோர்க்கு உரிய தண்டனையை அளியும். 3 எத்துணைக் காலம், ஆண்டவரே! எத்துணைக் காலம் பொல்லார் அக்களிப்பர்? 4 அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்; தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர். 5 ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர். 6 கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்; திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர். 7 ‘ஆண்டவர் இதைக் கண்டு கொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை’ என்கின்றனர். 8 மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்; மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்? 9 செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ? 10 மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ? 11 மானிடரின் எண்ணங்கள் வீணானவை; இதனை ஆண்டவர் அறிவார். 12 ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்; 13 அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பொல்லார்க்குக் குழி வெட்டப்படும். 14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். 15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர். 16 என் சார்பில் பொல்லார்க்கு எதிராக எழுபவர் எவர்? என் சார்பில் தீமை செய்வோர்க்கு எதிராக நிற்பவர் எவர்? 17 ஆண்டவர் எனக்குத் துணை நிற்காதிருந்தால், என் உயிர் விரைவில் மௌன உலகிற்குச் சென்றிருக்கும்! 18 ‘என் அடி சறுக்குகின்றது’ என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று. 19 என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது. 20 சட்டத்திற்குப் புறம்பாகத் தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர் உம்மோடு ஒன்றாக இணைந்திருக்க முடியுமோ? 21 நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் இணைகின்றனர்; மாசற்றோர்க்குக் கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர். 22 ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்; என் கடவுள் எனக்குப் புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார். 23 அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்; அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்; நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார். 94:1 1 கொரி 3:20.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-94
572
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 95 – திருவிவிலியம்
புகழ்ச்சிப் பாடல் 1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். 3 ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர். 4 பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. 5 கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. 6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! 8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். 10 நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‛அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்’. 11 எனவே, நான் சினமுற்று, ‛நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன். 95:7-8 எபி 3:15; 4:7. 95:7-11 எபி 3:7-11. 95:8-9 விப 17:1-7; எண் 20:2-13. 95:11 எண் 14:20-23; இச 1:34-36; 12:9-10; எபி 4:3-5.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-95
573
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 96 – திருவிவிலியம்
அனைத்து உலகின் அரசர் (1 குறி 16:23-33) 1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். 4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. 5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். 6 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன; ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன; 7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். 9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். 11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். 13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். 96:7-9 திபா 29:1-2.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-96
574
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 97 – திருவிவிலியம்
அனைத்து உலகின் தலைவர் 1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். 3 நெருப்பு அவர்முன் செல்கின்றது; சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது. 4 அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன; மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது. 5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. 7 உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்; அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். 8 ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை சீயோன் கேட்டு மகிழ்கின்றது; யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன. 9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! 10 தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்; பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார். 11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-97
575
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 98 – திருவிவிலியம்
அனைத்து உலகின் தலைவர் (புகழ்ப்பா) 1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. 2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். 5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். 7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்; 9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-98
576
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 99 – திருவிவிலியம்
அனைத்து உலகின் அரசர் 1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மக்களினத்தார் கலங்குவராக! அவர் கெருபுகள்மீது வீற்றிருக்கின்றார்; மண்ணுலகம் நடுநடுங்குவதாக! 2 சீயோனில் ஆண்டவர் மேன்மையுடன் விளங்குகின்றார்; எல்லா இனத்தார் முன்பும் மாட்சியுடன் திகழ்கின்றார். 3 மேன்மையானதும் அஞ்சுதற்கு உரியதுமான அவரது பெயரை அவர்கள் போற்றுவார்களாக! அவரே தூயவர். 4 வல்லமைமிக்க அரசரே! நீதியை நீர் விரும்புகின்றீர்; நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்; யாக்கோபினரிடையே நீதியையும் நேர்மையையும் நீர்தாமே நிலைநாட்டுகின்றீர். 5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! 6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். 7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். 8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்; ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர். 9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். 99:1 விப 25:22. 99:7 விப 33:9.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-99
577
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 100 – திருவிவிலியம்
புகழ்ச்சிப்பாடல் (நன்றி நவில்வ‌தற்கான புகழ்ப்பா) 1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! 3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! 4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! 5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். 100:5 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 106:1; 107:1; 118:1; 136:1; எரே 13:11.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-100
578
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 101 – திருவிவிலியம்
அரசரின் வாக்குறுதி (தாவீதின் புகழ்ப்பா) 1 இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன். 2 மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன். 3 இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது. 4 வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன். 5 தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்; 6 நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன்; நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்; 7 வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை. பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை. 8 நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும் நாள்தோறும் அழிப்பேன்; ஆண்டவரின் நகரினின்று தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-101
579
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 102 – திருவிவிலியம்
துன்புறுவோரின் மன்றாட்டு (துன்புறும் ஒருவர் மனம் தளர்ந்து ஆண்டவரை நோக்கித் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் மன்றாட்டு) 1 ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக! 2 நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்! 3 என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன; என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன. 4 என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது; என் உணவையும் நான் உண்ண மறந்தேன். 5 என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன. 6 நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்; பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன். 7 நான் தூக்கமின்றித் தவிக்கின்றேன்; கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன். 8 என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்; என்னை எள்ளி நகையாடுவோர் என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர். 9 சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்; என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன். 10 ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்; நீர் என்னைத் தூக்கி எறிந்துவிட்டீர். 11 மாலை நிழலைப்போன்றது எனது வாழ்நாள்; புல்லென நான் உலர்ந்து போகின்றேன். 12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்; உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும். 13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்; இதோ! குறித்த காலம் வந்துவிட்டது. 14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்; அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். 15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். 18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். 23 என் வாழ்க்கைப் பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார். 24 நான் உரைத்தது; “என் இறைவா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்; உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ? 25 முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்; விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ! 26 அவையோ அழிந்துவிடும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்; அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்; அவையும் மறைந்துபோம். 27 நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது. 28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 102:25-27 எபி 1:10-12.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-102
580
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 103 – திருவிவிலியம்
கடவுளின் அன்பு (தாவீதுக்கு உரியது) 1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! 3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். 5 அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும். 6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். 8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். 13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். 14 அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. 15 மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். 16 அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது. 17 ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும். 18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். 19 ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது. 20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள். 21 ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். 22 ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு! 103:8 யாக் 5:11.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-103
581
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 104 – திருவிவிலியம்
படைப்பின் மேன்மை 1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்; 3 நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! 4 காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். 5 நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது. 6 அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது; 7 நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது; 8 அது மலைகள்மேல் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது; 9 அது மீறிச்செல்லாதவாறு அதற்கு எல்லை வகுத்தீர்; பூவுலகை அது மீண்டும் மூடிவிடாதபடி செய்தீர்; 10 பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்; 11 அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்; காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்; 12 நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன; 13 உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது. 14 கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்; 15 மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர். 16 ஆண்டவரின் மரங்களுக்கு — லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு — நிறைய நீர் கிடைக்கின்றது. 17 அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன; தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன. 18 உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்; கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும். 19 காலங்களைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்; ஆதவன் தான் மறையும் நேரத்தை அறிவான். 20 இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது; அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும். 21 இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன; அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன. 22 கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன. 23 அப்பொழுது மானிடர் வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்; அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர். 24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. 25 இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. 26 அங்கே கப்பல்கள் செல்கின்றன; அங்கே துள்ளிவிளையாட லிவியத்தானைப் படைத்தீர்! 27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. 28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. 29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். 31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 32 மண்ணுலகின்மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது நடுங்கும்; மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும். 33 நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; என்னுயிர் உள்ளவரையிலும் என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன். 34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். 35 பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா! 104:4 எபி 1:7. 104:26 யோபு 41:1; திபா 74:14; எசா 27:1.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-104
582
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 105 – திருவிவிலியம்
கடவுளும் அவர்தம் மக்களும் (1 குறி 16:8-22) 1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். 6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. 8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். 10 யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார். 11 ‘கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்; அப்பங்கே உங்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்’ என்றார் அவர். 12 அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அவர்கள் அன்னியராய் இருந்தார்கள். 13 அவர்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள். 14 யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டு விடவில்லை; அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார். 15 ‘நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்! என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்’ என்றார் அவர். 16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்; உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். 17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்; யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். 18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர். 19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று; ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது. 20 மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்; மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; 21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்; தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். 22 அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்; அவருடைய அவைப்பெரியோருக்கு நல்லறிவு புகட்டினார். 23 பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்; யாக்கோபு காம் நாட்டில் அன்னியராய் வாழ்ந்தார். 24 ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். 25 தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். 26 அவர்தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். 27 அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர். 28 அவர் இருளை அனுப்பி நாட்டை இருட்டாக்கினார்; அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை. 29 அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்; அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார். 30 அவர்களது நாட்டிற்குள் தவளைகள் ஏறிவந்தன; மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும் அவை நுழைந்தன. 31 அவர் கட்டளையிட, அவர்களுடைய நாடு முழுவதிலும் ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன. 32 அவர் நீருக்குப் பதிலாகக் கல்லை மழையாகப் பொழிந்தார்; அவர்களது நாடெங்கும் மின்னல் தெறிக்கச் செய்தார். 33 அவர் அவர்களின் திராட்சைச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்; அவர்களது நாடெங்குமுள்ள மரங்களை முறித்தார். 34 அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும் எண்ணற்ற வெட்டுப்புழுக்களும் அங்கே தோன்றின. 35 அவை அவர்களது நாட்டின் பயிர் பச்சைகளைத் தின்றுத்தீர்த்தன; அவர்களது நிலத்தின் விளைச்சல்களை விழுங்கிவிட்டன. 36 அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார். 37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. 38 அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர் அகமகிழ்ந்தனர்; ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. 39 அவர் அவர்களைப் பாதுகாக்க மேகத்தைப் பரப்பினார்; இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார். 40 அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வரச்செய்தார்; வானினின்று வந்த உணவால் அவர்களை நிறைவுறச் செய்தார். 41 அவர் கற்பாறையைப் பிளந்தார்; தண்ணீர் பொங்கி வழிந்தது; அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று. 42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர் தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். 44 அவர் வேற்றினத்தாரின் நாடுகளை அவர்களுக்கு அளித்தார்; மக்களினங்களது உழைப்பின் பயனை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தார். 45 அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா! 105:9 தொநூ 12:7; 17:8; 26:3. 105:10-11 தொநூ 28:13. 105:14-15 தொநூ 20:3-7. 105:16 தொநூ 41:53-57. 105:17 தொநூ 37:28; 45:5. 105:18-19 தொநூ 39:20-40:23. 105:20 தொநூ 41:14. 105:21 தொநூ 41:39-41. 105:23 தொநூ 46:6; 47:11. 105:24-25 விப 1:7-14. 105:26 விப 3:1-4:17. 105:28 விப 10:21-23. 105:29 விப 7:17-21. 105:30 விப 8:1-6. 105:31 விப 8:16-17, 20-24. 105:32-33 விப 9:22-25. 105:34-35 விப 10:12-15. 105:36 விப 12:29. 105:37-38 விப 12:33-36. 105:39 விப 13:21-22. 105:40 விப 16:2-15. 105:41 விப 17:1-7; எண் 20:2-13. 105:44 யோசு 11:16-23.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-105
583
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 106 – திருவிவிலியம்
கடவுள் தம் மக்களுக்குக் காட்டிய கருணை 1 அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு! 2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? ஆவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? 3 நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபேற்றோர்! 4 ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவு கூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணைசெய்யும்! 5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். 6 எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம். 7 எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை; உமது மாபெரும் பேரன்பை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை; மாறாக உன்னதமானவரை எதிர்த்துச் செங்கடல் ஓரத்தில்* கலகம் செய்தனர். 8 அவரோ தமது பெயரின் பொருட்டு அவர்களை விடுவித்தார்; இவ்வாறு அவர் தமது வலிமையை வெளிப்படுத்தினார். 9 அவர் செங்கடலை அதட்டினார்; அது உலர்ந்து போயிற்று; பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல் அவர்களை ஆழ்கடல் வழியே நடத்திச்சென்றார். 10 எதிரியின் கையினின்று அவர்களை விடுவித்தார்; பகைவரின் பிடியினின்று அவர்களை மீட்டார். 11 அவர்களுடைய எதிரிகளைக் கடல்நீர் மூழ்கடித்தது; அவர்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை. 12 அப்பொழுது, அவர்கள் அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தார்கள்; அவரைப் புகழ்ந்து பாடினார்கள். 13 ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்; அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. 14 பாலைநிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள். 15 அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குச் கொடுத்தார்; அவர்களின் உயிரை அழிக்குமாறு அவர்கள்மீது நோயை அனுப்பினார். 16 பாளையத்தில் இருக்கும்போது மோசேயின்மீதும், ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற ஆரோன்மீதும், அவர்கள் பொறாமை கொண்டார்கள். 17 நிலம் பிளந்து தாத்தானை விழுங்கியது; அபிராமின் கும்பலை அப்படியே புதைத்துவிட்டது. 18 அக்கும்பலிடையே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது; தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது. 19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக, புல்தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்; 21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். 23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர் போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். 24 அருமையான நாட்டை அவர்கள் இகழ்ந்தார்கள்; அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவில்லை. 25 அவர்கள் தங்களின் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்; ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. 26 ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத் தம் கையை ஓங்கி ‘நான் உங்களைப் பாலைநிலத்தில் வீழ்ச்சியுறச் செய்வேன்; 27 உங்கள் வழிமரபினரை வேற்றினங்களிடையிலும் அன்னிய நாடுகளிலும் சிதறடிப்பேன்’ என்றார். 28 பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப் பற்றிக் கொண்டார்கள். உயிரற்ற தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றை உண்டார்கள்; 29 இவ்வாறு தங்கள் செய்கைகளினால் அவருக்குச் சினமூட்டினார்கள்; ஆகவே, கொள்ளைநோய் அவர்களிடையே பரவிற்று. 30 பினகாசு கொதித்தெழுந்து தலையிட்டதால் கொள்ளைநோய் நீங்கிற்று. 31 இதனால், தலைமுறை தலைமுறையாக என்றென்றும், அவரது செயல் நீதியாகக் கருதப்பட்டது. 32 மெரிபாவின் ஊற்றினருகில் அவருக்குச் சினமூட்டினார்கள். அவர்களின் பொருட்டு மோசேக்கும் தீங்கு நேரிட்டது. 33 மோசேக்கு அவர்கள் மனக்கசப்பை ஏற்படுத்தியதால் அவர் முன்பின் பாராது பேசினார். 34 ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை. 35 வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்; 36 அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. 37 அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்; 38 மாசற்ற இரத்தத்தை, தங்கள் புதல்வர் புதல்வியரின் இரத்தத்தைச் சிந்தினர்; கானான் நாட்டுத் தெய்வங்களின் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டார்கள்; அவர்களின் இரத்தத்தால் நாடு தீட்டுப்பட்டது. 39 அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்; தங்கள் செயல்கள் மூலம் வேசித்தனம் செய்தனர். 40 எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார். 41 வேற்றினத்தாரின் கையில் அவர் அவர்களை ஒப்படைத்தார்; அவர்களை வெறுத்தோரே அவர்களை ஆட்சி செய்தனர். 42 அவர்கள் எதிரிகள் அவர்களை ஒடுக்கினர்; தங்கள் கையின்கீழ் அவர்களைத் தாழ்த்தினர். 43 பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்; அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்; தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர். 44 எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார். 45 அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்; தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்; 46 அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும் அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார். 47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம். 48 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும் ‘ஆமென்’ எனச் சொல்வார்களாக! அல்லேலூயா! 106:1 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 107:1; 118:1, 29; 136:1; எரே 33:11. 106:7 விப 14:10-12. 106:9-12 விப 14:21-31. 106:12 விப 15:1-12. 106:14-15 எண் 11:4-34. 106:16-18 எண் 16:1-35. 106:19-23 விப 32:1-14. 106:24-26 எண் 14:1-35. 106:27 லேவி 26:33. 106:28-31 எண் 25:1-13. 106:32-33 எண் 20:2-13. 106:34-36 நீத 2:1; 3:5-6. 106:37 2 அர 17:7. 106:38 எண் 35:33. 106:40-46 நீத 2:14-18. 106:47-48 1 குறி 16:35-36. 106:7 ‘செங்கடல் ஓரத்தில்’ என்பதற்குப் பதில் ‘கடல் ஓரத்தில்’ எ’பது எபிரேய பாடம்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-106
584
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 107 – திருவிவிலியம்
ஐந்தாம் பகுதி (107-150) கடவுளின் கருணையைப் புகழ்தல் 1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர், 3 கிழக்கினின்றும் மேற்கினின்றும், வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக. 4 பாலைநிலத்தில் பாழ் வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை; 5 பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர். 6 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார். 7 நேரிய பாதையில் அவர்களை வழிநடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார். 8 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! 9 ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார். 10 சிலர் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர்; விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர். 11 ஏனெனில், அவர்கள் இறைவனின் கட்டளைகளை எதிர்த்து நின்றனர்; உன்னதரின் அறிவுரைகளைப் புறக்கணித்தனர். 12 கடும் வேலையால் அவர் அவர்களின் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்; அவர்கள் நிலைகுலைந்து போயினர்; அவர்களுக்குத் துணைசெய்வார் எவருமிலர். 13 அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்தார். 14 காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்த அவர்களை அவர் வெளிக்கொணர்ந்தார். அவர்களைப் பிணித்திருந்த தளைகளைத் தகர்த்தெறிந்தார். 15 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! 16 ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்; இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துவிட்டார். 17 சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு நோய்களுக்கு உள்ளாயினர்; அவர்களுடைய தீச்செயல்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர். 18 எல்லா உணவையும் அவர்களின் மனம் வெறுத்தது; சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள். 19 அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார். 20 தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்; அழிவினின்று அவர்களை விடுவித்தார். 21 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! 22 நன்றிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக! அக்களிப்போடு அவர்தம் செயல்களைப் புகழ்ந்தேத்துவார்களாக! 23 சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர். 24 அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். 25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது. 26 அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. 27 குடிவெறியரைப் போல் அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்; அவர்களின் திறனெல்லாம் பயனற்றுப் போயிற்று. 28 தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். 29 புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. 30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார். 31 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்தவார்களாக! 32 மக்களின் பேரவையில் அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக! பெரியோரின் மன்றத்தில் அவரைப் போற்றுவார்களாக! 33 ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்; நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார். 34 செழிப்பான நிலத்தை உவர் நிலமாக்கினார்; அங்குக் குடியிருந்தோரின் தீச்செயலை முன்னிட்டு இப்படிச் செய்தார். 35 பாலை நிலத்தையோ நீர்த் தடாகமாக மாற்றினார்; வறண்ட நிலத்தை நீருற்றுகளாகச் செய்தார். 36 பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்; அவர்கள் அங்கே குடியிருக்க நகரொன்றை அமைத்தனர். 37 அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்; அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன. 38 அவர் ஆசி வழங்கினார்; அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்; அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை. 39 பின்பு, அவர்களின் தொகை குறைந்தது; அவர்கள் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்துப்பட்டு இகழ்ச்சிக்கு உள்ளாயினர். 40 தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி, அவர்களைப் பாதையற்ற பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர். 41 ஆனால், எளியோரை அவர் துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார், அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார். 42 நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து மகிழ்கின்றனர்; தீயோர் யாவரும் தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர். 43 ஞானமுள்ளோர் இவற்றைக் கவனத்தில் கொள்ளட்டும்! அவர்கள் ஆண்டவரின் பேரன்பை உணர்ந்து கொள்ளட்டும்! 107:1 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; 136:1; எரே 33:11.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-107
585
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 108 – திருவிவிலியம்
பகைவரிடமிருந்து விடுவிக்குமாறு வேண்டல் (தாவீதின் புகழ்ப்பாடல்) (திப 57:7-11; 60:5-12) 1 என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; நான் பாடுவேன். உம்மைப் புகழ்ந்து பாடுவேன். என் நெஞ்சே! விழித்தெழு; 2 வீணையே! யாழே! விழித்தெழுங்கள்; வைகறையை விழித்தெழச் செய்வேன். 3 ஆண்டவரே, மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 4 ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு! முகில்களைத் தொடுகின்றது உமது உண்மை! 5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! 6 உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்! என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்! 7 கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்; “வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்; சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்! 8 கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே; எப்ராயிம் என் தலைச்சீரா, யூதா என் செங்கோல்! 9 மோவாபு! எனது பாதங்கழுவும் பாத்திரம்; ஏதோமின்மீது எனது மிதியடியை எறிவேன்; பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!” 10 அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம்வரைக்கும் என்னைக் கூட்டிச் செல்பவர் யார்? 11 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ? கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ? 12 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்; 13 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்துவிடுவார்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-108
586
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 109 – திருவிவிலியம்
துன்புற்றவரின் முறையீடு (பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா) 1 என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும். 2 தீயோரும் வஞ்சனை செய்வோரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்; எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசியுள்ளனர். 3 பகைவரின் சொற்கள் என்னைச் சூழ்ந்துள்ளன; அவர்கள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர். 4 நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்; நானோ அவர்களுக்காக மன்றாடினேன். 5 நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமையே செய்தனர்; அன்புக்குப் பதிலாக அவர்கள் வெறுப்பையே காட்டினர்; 6 அவர்கள் கூறியது: “அவனுக்கு எதிராகத் தீயவனை எழும்பச் செய்யும்! ‘குற்றம் சாட்டுவோன்’ அவனது வலப்பக்கம் நிற்பானாக! 7 நீதி விசாரணையின்போது அவன் தண்டனை பெறட்டும்! அவன் செய்யும் வேண்டுகோள் குற்றமாகக் கருதப்படுவதாக! 8 அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்; அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்! 9 அவனுடைய பிள்ளைகள் தந்தை இழந்தோர் ஆகட்டும்! அவனுடைய மனைவி கைம்பெண் ஆகட்டும்! 10 அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்! பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்! 11 அவனுக்கு உரியவற்றை எல்லாம் கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்! அவனது உழைப்பின் பயனை அன்னியர் கொள்ளையடிக்கட்டும்! 12 அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனும் இல்லாதிருக்கட்டும்! தந்தையை இழந்த, அவனுடைய பிள்ளைகள்மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்! 13 அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்! அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய பெயர் இல்லாது போகட்டும்! 14 அவனுடைய மூதாதையரின் குற்றத்தை ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்! அவனுடைய தாய் செய்த பாவத்தை அவர் மன்னியாது இருக்கட்டும்! 15 அவை என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்! அவனது நினைவை பூவுலகினின்று அடியோடு அவர் அகற்றட்டும்! 16 ஏனெனில், அவன் இரக்கம் காட்ட நினைக்கவில்லை; எளியோரையும் வறியோரையும் கொடுமைப்படுத்தினான்; நெஞ்சம் நொறுங்குண்டோரைக் கொலைசெய்யத் தேடினான். 17 சபிப்பதையே அவன் விரும்பினான்; விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்! ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை; ஆகவே அது அவனைவிட்டுத் தொலைவில் செல்லட்டும்! 18 சாபமே அவன் அணிந்த ஆடை; தண்ணீரென அவன் உடலையும் எண்ணெயென அவன் எலும்புகளையும் அது நனைக்கட்டும்! 19 அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்! நாள்தோறும் அவன் கட்டும் கச்சைபோல் இருக்கட்டும்! 20 என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும், எனக்கு எதிராகத் தீயன பேசுவோருக்கும் ஆண்டவர் அளிக்கும் கைம்மாறாக அது இருப்பதாக! 21 ஆனால், என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்! 22 நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது. 23 மாலைநேர நிழலைப்போல் நான் மறைந்து போகின்றேன்; வெட்டுக் கிளியைப் போல நான் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன். 24 நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன; என் உடல் வலிமை இழந்து மெலிந்து போகின்றது. 25 நானோ அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்; என்னைப் பார்க்கின்றோர் தலையை ஆட்டுகின்றனர். 26 ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப மீட்டருளும்! 27 இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும். 28 அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் எனக்கு ஆசி வழங்கும்! எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்! உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன். 29 என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு மானக்கேடு மேலாடை ஆகட்டும்! அவர்களின் வெட்கம் அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்! 30 என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன். 31 ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார். 109:8 திப 1:20. 109:25 மத் 27:39; மாற் 15:29.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-109
587
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 110 – திருவிவிலியம்
ஆண்டவரும் அவர் தேர்ந்து கொண்ட அரசரும் (தாவீதின் புகழ்ப்பா) 1 ஆண்டவர் என் தலைவரிடம், ‛நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். 2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! 3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். 4 ‛மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார். 5 என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார். 6 வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்; பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார். 7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்; ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார். 110:1 மத் 22:44; மாற் 12:36; லூக் 20:42-43; திப 2:34-35; 1 கொரி 15:25; எபே 1:20-22; கொலோ 3:1; எபி 1:13; 8:1; 10:12-13. 110:4 எபி 5:6; 6:20; 7:17,21.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-110
588
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 111 – திருவிவிலியம்
ஆண்டவரைப் போற்றுதல் 1 அல்லேலூயா! நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். 3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். 5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். 7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை. 8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. 9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது. 10 ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. 111:10 யோபு 28:8; நீமொ 1:7;9:10.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-111
589
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 112 – திருவிவிலியம்
கடவுளுக்கு அஞ்சி நடப்போர் 1 அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். 3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். 4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். 5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். 7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். 8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. 9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். 10 தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்; பல்லை நெரிப்பர்; சோர்ந்து போவர்; தீயோரின் விருப்பமெல்லாம் வீணாய்ப்போம். 112:9 2 கொரி 9:9.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-112
590
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 113 – திருவிவிலியம்
ஆண்டவரின் கருணை 1 அல்லேலூயா! ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப்பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப்பெறுவதாக! 3 கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்விட உயர்ந்து அவரது மாட்சி. 5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்; 7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடி மக்களிடையே – தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே – அவர்களை அமரச் செய்கின்றார். 9 மலடியை அவள் இல்லத்தில் வாழ வைக்கின்றார்; தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு அவளுக்கு அருள்கின்றார். அல்லேலூயா!
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-113
591
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 114 – திருவிவிலியம்
பாஸ்காப் பாடல் 1 எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, 2 யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது. 3 செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது. 4 மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன. 5 கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்? 6 மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள்போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்? 7 பூவுலகே! தலைவர் முன்னிலையில் நடுநடுங்கு! யாக்கோபின் கடவுள் முன்னிலையில் நடுக்கமுறு! 8 அவர் பாறையைத் தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்; கற்பாறையை வற்றாத நீர்ச்சுனை ஆக்குகின்றார். 114:1 விப 12:51. 114:3 விப 14:21; யோசு 3:16. 114:8 விப 17:1-7; எண் 20:2-13.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-114
592
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 115 – திருவிவிலியம்
ஆண்டவரே உண்மையான கடவுள் 1 எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று; மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும். 2 ‘அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்? 3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார். 4 அவர்களுடைய தெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! 5 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை; 6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. 7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை; தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை. 8 அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். 9 இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 10 ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 11 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். 12 ஆண்டவர் நம்மை நினைவு கூர்ந்துள்ளார்; நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்; ஆரோனின் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்; 13 தமக்கு அஞ்சிநடப்போர்க்கு ஆண்டவர் ஆசி வழங்குவார்; சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குவார். 14 ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்; உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வளரச் செய்வார். 15 நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே. 16 விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது; மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார். 17 இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை; மௌன உலகிற்குள் இறங்குவோர் எவருமே அவரைப் புகழ்வதில்லை; 18 நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்; இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்துகின்றோம். 115:4-8 திபா 135:15-18; திவெ 9:20. 115:13 திவெ 11:18; 19:5.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-115
593
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 116 – திருவிவிலியம்
சாவினின்று தப்பியவர் பாடியது 1 அல்லேலூயா! ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். 2 அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். 3 சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன; பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. 4 நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‛ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்’ என்று கெஞ்சினேன். 5 ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர். 6 எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். 7 ‛என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதிகொள்; ஏனெனில், ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்’. 8 என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார். 9 உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். 10 ‛மிகவும் துன்புறுகிறேன்!’ என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். 11 ‛எந்த மனிதரையும் நம்பலாகாது’ என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன். 12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். 14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; 19 உமது இல்லத்தில் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். அல்லேலூயா!
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-116
594
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 117 – திருவிவிலியம்
ஆண்டவர் போற்றி! 1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! 2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! 117:1 உரோ 15:11.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-117
595
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 118 – திருவிவிலியம்
நன்றிப் புகழ் மாலை 1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 ‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 3 ‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4 ‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! 5 நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார். 6 ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? 7 எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன். 8 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 9 உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! 10 வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன். 11 எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன். 12 தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன். 13 அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. 19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். 22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். 25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27 ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள். 28 என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். 29 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 118:1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 107:1; 136:1; எரே 33:11. 118:6 எபி 13:6. 118:14 விப 15:2; எசா 12:2. 118:22 லூக் 20:17; திப 4:11; 1 பேது 2:7. 118:22-23 மத் 21:42; மாற் 12:10-11. 118:25 மத் 21:9; மாற் 11:9; யோவா 12:13. 118:26 மத் 21:9; 23:39; மாற் 11:9; லூக் 18:35; 19:38; யோவா 12:13.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-118
596
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 119 – திருவிவிலியம்
ஆண்டவரின் திருச்சட்டம் 1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். 3 அநீதி செய்யாமல் அவரது வழியில் நடப்போர் பேறுபெற்றோர். 4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! 6 உம் கட்டளைகளை எல்லாம் கருத்தில் கொண்டிருந்தால், இகழ்ச்சியுறேன்; 7 உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன். 8 உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும். திருச்சட்டப்படி நடத்தல் 9 இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ? 10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளைவிட்டு என்னை விலகவிடாதேயும். 11 உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன். 12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். 13 உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன். 14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். 15 உம் நியமங்களைக் குறித்து நான் சிந்திப்பேன்; உம் நெறிகளில் என் சிந்தையைச் செலுத்துவேன்; 16 உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன். திருச்சட்டம் தரும் இன்பம் 17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். 18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். 19 இவ்வுலகில் நான் அன்னியனாய் உள்ளேன்; உம் கட்டளைகளை என்னிடமிருந்து மறைக்காதேயும். 20 எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது. 21 செருக்குற்றோரைக் கண்டிக்கின்றிர்; உம் கட்டளைகளைப் புறக்கணிப்போர் சபிக்கப்பட்டவரே. 22 பழிச்சொல்லையும், இழிவையும் என்னிடமிருந்து அகற்றியருளும்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்துள்ளேன். 23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். திருச்சட்டத்தின்படி நடக்க உறுதி கொள்ளல் 25 நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன்; உம் வாக்கின்படி எனக்கு வாழ்வளித்தருளும். 26 என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். 28 துயரத்தால் என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது; உமது வாக்கின்படி என்னைத் திடப்படுத்தும். 29 பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். 30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகோண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். 31 உம் ஒழுங்குமுறைகளை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்; ஆண்டவரே! என்னை வெட்கமடையவிடாதேயும். 32 நீர் என் அறிவை விரிவாக்கும்போது, உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன். நுண்ணறிவுக்காக வேண்டல் 33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். 35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 36 உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; தன்னலத்தை நாடவிடாதேயும். 37 வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்; உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும். 38 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு அளித்த வாக்குறுதியை உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும். 39 என்னை அச்சுறுத்தும் பழிச்சொல் எதற்கும் என்னை உள்ளாக்காதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை. 40 உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும். திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை 41 ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்; உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக! 42 அப்போது, என்னைப் பழிப்போர்க்கு நான் ஏற்ற பதில் கூறுவேன்; ஏனெனில், உமது வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. 43 என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். 44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். 45 உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன். 46 உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்; வெட்கமுறமாட்டேன். 47 உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன். 48 நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன். திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை 49 உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவுகூரும்; அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர். 50 உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது; ஏனெனில், அது எனக்கு வாழ்வளிக்கின்றது. 51 செருக்குற்றோர் என்னை அளவின்றி ஏளனம் செய்கின்றனர்; ஆனால், உம் திருச்சட்டத்தினின்று நான் விலகவில்லை. 52 ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த நீதித் தீர்ப்புகளை நான் நினைவு கூர்கின்றேன்; அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன். 53 உம் திருச்சட்டத்தைக் கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது. 54 என் வாழ்க்கைப் பயணத்தில் உம் விதிமுறைகள் எனக்குப் புகழ்ப் பாக்களாய் உள்ளன. 55 ஆண்டவரே! இரவிலும் நான் உமது பெயரை நினைவு கூர்கின்றேன்; உமது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பேன். 56 நான் இந்நிலையை அடைந்துள்ளது உமது நியமங்களைக் கடைப்பிடிப்பதால்தான். திருச்சட்டத்தின் மீது ஆர்வம் 57 ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். 58 என் முழுமனத்தோடு உம் திருமுகத்தை நாடினேன்; உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு அருள்கூரும். 59 நான் நடக்கும் வழிகளை நன்கு ஆய்ந்தேன்; உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய் அடியெடுத்து வைத்தேன். 60 உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நான் விரைகின்றேன்; காலம் தாழ்த்தவில்லை. 61 தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன். 62 நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து, உம்மைப் புகழ்ந்துபாட நள்ளிரவில் எழுகின்றேன். 63 உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும் உம் நியமங்களைக் கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன். 64 ஆண்டவரே! உமது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது; உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்! திருச்சட்டத்தின் பயன் 65 ஆண்டவரே! உமது வாக்குறுதிக்கேற்ப, உம் ஊழியனுக்கு நன்மையை செய்துள்ளீர்! 66 நன் மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 67 நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன். 68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். 69 செருக்குற்றோர் என்னைப்பற்றிப் பொய்களைப் புனைகின்றார்கள்; நானோ முழுமனத்துடன் உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன். 70 அவர்கள் இதயம் கொழுப்பேறிப் போயிற்று. நானோ உம் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுகின்றேன். 71 எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். 72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை 73 உம் கைகளே என்னை உருவாக்கின; என்னை வடிவமைத்தன; உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள எனக்கு மெய்யுணர்வு தாரும். 74 உமக்கு அஞ்சுவோர், உமது வாக்கை நான் நம்பினதற்காக என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர். 75 ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே. 76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். 78 செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக! அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்கினார்கள்; நானோ உம் நியமங்கள் பற்றிச் சிந்தனை செய்வேன். 79 உமக்கு அஞ்சிநடப்போர், உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவராக! 80 உம் நியமங்களைப் பொறுத்த மட்டில் என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக! அதனால், நான் வெட்கமுறேன். விடுதலைக்காக மன்றாடல் 81 நீர் அளிக்கும் மீட்புக்காக என் நெஞ்சம் ஏங்குகின்றது; உம் வாக்கை நான் நம்புகின்றேன். 82 உம் வாக்குறுதியை எதிர்நோக்கி என் கண்கள் பூத்துப்போயின; ‘எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?’ என்று வினவினேன். 83 புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்; உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை. 84 உம் ஊழியன் எத்தனை நாள் காத்திருக்கவேண்டும்? என்னைக் கொடுமைப்படுத்துவோரை என்று தண்டிப்பீர்? 85 உமது திருச்சட்டப்படி நடக்காமல், செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்; 86 உம் கட்டளைகள் எல்லாம் நம்பத்தக்கவை; அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்குகின்றனர்; எனக்குத் துணை செய்யும். 87 அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை ஏறக்குறைய அழித்துவிட்டனர்; நானோ உம் நியமங்களைக் கைவிடவில்லை. 88 உமது பேரன்புக்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும், நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன். திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை 89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது. 90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. 91 உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன. ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. 92 உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால் என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன். 93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர். 94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன். 95 தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன். 96 நிறைவான அனைத்தின் எல்லையையும் நான் பார்த்துவிட்டேன்; உமது கட்டளையின் நிறைவோ எல்லை அற்றது. திருச்சட்டத்தின் மீது அன்பு 97 ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன். 98 என் எதிரிகளைவிட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது. 99 எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்; 100 முதியோர்களைவிட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன். 101 உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீயவழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன். 102 உம் நீதிநெறிகளைவிட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். 103 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. 104 உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன். திருச்சட்டத்தின் ஒளி 105 என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! 106 நீதியான உம் நெறிமுறைகளை நான் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டு உறுதிமொழி தந்துள்ளேன். 107 ஆண்டவரே! மிக மிகத் துன்புறுத்தப்படுகின்றேன்; உம் வாக்குறுதியின்படி என்னை உயிரோடு வைத்தருளும். 108 நான் மனமுவந்து வாயார உம்மைப் புகழ்வதை ஆண்டவரே! தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்; உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும். 109 நான் என்னுயிரைக் கையில்வைத்துள்ளேன்; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன். 110 தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்; ஆனால், உம் நியமங்களினின்று நான் பிறழவில்லை. 111 உம் ஒழுங்குமறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன. 112 உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம், என்றென்றும், இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும். திருச்சட்டம் தரும் பாதுகாப்பு 113 இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்; உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன். 114 நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்; உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன். 115 தீயன செய்வோரே! என்னை விட்டு விலகுங்கள்; என் கடவுளின் கட்டளைகளை நான் கடைப்பிடிப்பேன்; 116 நான் பிழைக்குமாறு, உமது வாக்குறுதிக்கேற்ப என்னைத் தாங்கியருளும்; எனது நம்பிக்கை வீண்போகவிடாதேயும். 117 என்னைத் தாங்கிக்கொள்ளும்; நான் மீட்புப் பெறுவேன்; எந்நாளும் உம் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டிருப்பேன். 118 உம் விதிமுறைகளைவிட்டு விலகுவோர் அனைவரையும் நீர் ஒதுக்கித் தள்ளுகின்றீர்; அவர்களின் சூழ்ச்சிகள் வீணாய்ப் போகும். 119 பூவுலகின் பொல்லார் அனைவரையம் நீர் களிம்பெனக் கருதுகின்றீர்; ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள் மீது பற்றுக்கொண்டுள்ளேன். 120 உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடல் சிலிர்க்கின்றது; உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு நான் அஞ்சி நடுங்குகின்றேன். திருச்சட்டத்தின்படி நடத்தல் 121 நீதியும் நேர்மையும் ஆனவற்றையே செய்துள்ளேன்; என்னை ஒடுக்குவோர் கையில் என்னை விட்டுவிடாதேயும். 122 உம் ஊழியனின் நலத்தை உறுதிப்படுத்தும்; செருக்குற்றோர் என்னை ஒடுக்கவிடாதேயும். 123 நீர் தரும் விடுதலையையும் உமது நீதியான வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து, என் கண்கள் பூத்துப்போயின. 124 உம் பேரன்பிற்கேற்ப உம் ஊழியனுக்குச் செய்தருளும்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும். 125 உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்; அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்துகொள்வேன். 126 ஆண்டவரே! நீர் செயலாற்றும் நேரம் வந்துவிட்டது; உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது. 127 ஆகவே, பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். 128 உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக்கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். திருச்சட்டத்தின் மீது ஆவல் 129 உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். 130 உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. 131 வாயை ‛ஆ’வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். 132 உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்! 133 உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்! 134 மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்! உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன். 135 உம் ஊழியன்மீது உமது முகஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். 136 உமது திருச்சட்டத்தைப் பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு, என் கண்களினின்று நீர் அருவியாய் வழிந்தது. திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை 137 ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்; உம் நீதிநெறிகள் நேர்மையானவை. 138 நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை; அவை முற்றிலும் நம்பத்தக்கவை. 139 என் பகைவர் உம் வார்த்தைகளை மறந்துவிட்டதால், அவற்றின்மீது நான் கொண்டுள்ள தணியாத ஆர்வம் என்னை எரித்துவிடுகின்றது. 140 உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது, உம் ஊழியன் அதன்மீது பற்றுக்கொண்டுள்ளான். 141 சிறியன் அடியேன்! இழிவுக்கு உள்ளானவன்; ஆனால், உம் நியமங்களை மறக்காதவன். 142 உமது நீதி என்றுமுள நீதி; உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது. 143 துன்பமும் கவலையும் என்னைப் பற்றிக்கொண்டன; எனினும் உம் கட்டளைகள் என்னை மகிழ்விக்கின்றன. 144 உம் ஒழுங்குமுறைகள் எக்காலமும் நீதியுள்ளவை; நான் வாழுமாறு எனக்கு நுண்ணறிவு புகட்டும். விடுதலைக்காக மன்றாடல் 145 முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்; உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன். 146 உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என்னைக் காத்தருளும்; உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்தேன். 147 வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்; உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன். 148 உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன். 149 ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என் குரலைக் கேட்டருளும்; உமது நீதியின்பபடி என்னுயிரைக் காத்தருளும். 150 சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்; உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு. 151 ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்; உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை. 152 அவற்றை நீர் எக்காலத்திற்குமாக ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று முன்பே நான் அறிந்திருக்கின்றேன். உதவிக்காக மன்றாடல் 153 என் துன்ப நிலையைப் பார்த்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், உமது திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை. 154 எனக்காக வழக்காடி என்னை மீட்டருளும்; உமது வாக்குக்கேற்றபடி என் உயிரைக் காத்தருளும். 155 தீயோர்க்கு மீட்பு வெகு தொலைவில் உள்ளது; ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை. 156 ஆண்டவரே! உம் இரக்கம் மிகப் பெரியது; உம் நீதித்தீர்ப்புகளின்படி எனக்கு வாழ்வளியும். 157 என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்; ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை. 158 துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்; ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை. 159 ஆண்டவரே! நான் உம் கட்டளைகள்மீது எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன் என்பதைப் பாரும்; உம் பேரன்பிற்கேற்ப எனக்கு வாழ்வளியும். 160 உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்; நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன. திருச்சட்டத்தின்மீது பேரன்பு 161 தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்; ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது. 162 திரண்ட கொள்ளைப் பொருளை அடைந்தவன் மகிழ்வதுபோல உமது வாக்குறுதியில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன். 163 பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்; உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன். 164 நீதியான உம் நெறிமுறைகளைக் குறித்து ஒரு நாளைக்கு ஏழுமுறை உம்மைப் புகழ்கின்றேன். 165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. 166 ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்; உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன். 167 உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்து வருகின்றேன்; நான் அவற்றின்மீது பற்றுக்கொண்டுள்ளேன். 168 உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப்பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. உதவிக்காக மன்றாடல் 169 ஆண்டவரே! என் வேண்டுதல் உம் திருமுன் வருவதாக! உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு நுண்ணறிவு புகட்டும். 170 என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! உம் வாக்குறுதியின்படி என்னை விடுவியும். 171 உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால், என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும். 172 உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை. 173 உம் கரம் எனக்குத் துணையாய் இருப்பதாக! ஏனெனில், உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன். 174 ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்; உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 175 உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! 176 காணாமல்போன ஆட்டைப் போல் நான் அலைந்து திரிகின்றேன்; உம் ஊழியனைத் தேடிப்பாரும்; ஏனெனில், உம் கட்டளைகளை நான் மறக்கவில்லை. 119 எபிரேய அகரவரிசைப் பாடல்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-119
597
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 120 – திருவிவிலியம்
உதவிக்காக மன்றாடல் (சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்) 1 நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; அவரும் எனக்குச் செவி சாய்த்தார். 2 ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்; வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும். 3 வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்? 4 வீரனின் கூரிய அம்புகளும் தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்! 5 ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும், கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும், 6 சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. 7 நான் சமாதானத்தை நாடுவேன்; அதைப் பற்றியே பேசுவேன்; ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-120
598
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 121 – திருவிவிலியம்
நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர் (சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்) 1 மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2 விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். 3 அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். 4 இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை. 5 ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! 6 பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. 7 ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8 நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-121
599
திருப்பாடல்கள்
திருப்பாடல்கள் அதிகாரம் – 122 – திருவிவிலியம்
எருசலேமே நீ வாழி! (சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது) 1 “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். 3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும். 4 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். 6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! 8 உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-122